எதிர்வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் எந்த ஒரு நிறுவனமும் அல்லது எந்த ஒருவரும் கொவிட்-19 தொற்றுக்கான பல்படியத் தொடர் வினை ( பிசிஆர்) பரிசோதனையை அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநர்களிடம் செய்துகொள்ள முடியும்.
அதன்படி, பயணம் செய்யுமுன் பிசிஆர் சோதனை செய்யவேண்டியவர்கள் இனி சுகாதார அமைச்சிடம் இருந்து அந்தச் சோதனைக்கான அனுமதியைக் கோரவேண்டியது இல்லை. இன்றைய செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் இதனைத் தெரிவித்தார்.
அந்தப் பரிசோதனைகளுக்கான கட்டணத்திற்கு மானியம் வழங்கப்படாது. அங்கீகரிக்கப்பட்ட தனியார் சேவைகளைப் பெறுவோர் அச்சோதனைகளுக்குக் கட்டணம் செலுத்தவேண்டும்.
தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பவர்களும் பயணம் செய்வதற்குமுன், நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுமுன் என்பது போன்ற குறிப்பிட்ட நேரங்களில் பரிசோதனை செய்ய வேண்டியிராதவர்களும் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள முடியாது.
இம்மாதம் 30ஆம் தேதி இரவு 11.59 மணியிலிருந்து செயல்பாட்டிற்கு வரும் இப்புதிய நடைமுறையின்படி, விரிவான தேவைகளுக்கு சிங்கப்பூரைத் தயார்படுத்தும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
இப்போது சமூகத்தில் கிருமித் தொற்று குறைவாக இருந்தாலும் மூன்றாம் கட்டத் தளர்வுகள் நடப்புக்கு வந்ததும் நாள்தோறும் சமூகத்தில் 20 அல்லது 30 பேர் வரை தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார். அதனால் பிசிஆர் சோதனைகளை எளிதில் பெறுவதை உறுதிசெய்வது முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட 600 மருந்தகங்களும் தனியார் சுகாதாரப் பராமரிப்புச் சேவை வழங்குபவர்களும் டிசம்பர் மாதம் முதல் பிசிஆர் சோதனைகளை மேற்கொள்ளலாம். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.