சிங்கப்பூரின் முதலாவது இந்து சமய விழா இம்மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. கொவிட்-19 காரணமாக முற்றிலும் இணையம் வழி நடந்துவந்துள்ள அந்த விழா இன்றுடன் முடிவடைகிறது.
யோகா, உடல் நலம், உடலுறுதி, இசை, நடனம், சிங்கப்பூர் கோயில்கள், கோயில் நியதிகள் போன்ற பலவும் உட்பட அந்த விழாவில் மொத்தம் 23 நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.
சிங்கப்பூர் இந்து நிலையம் ஏற்பாட்டில் நடக்கும் அந்த விழாவை இந்து அறக்கட்டளை வாரியம் அங்கீகரித்து ஆதரவு வழங்கியது.
கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் விழாவை இந்த மாதம் 20ஆம் தேதி மெய்நிகர் நிகழ்ச்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் சிங்கப்பூரின் பன்மய சமூகத்தில் சமயக் குழுக்கள் மிக முக்கிய பங்காற்றுவதாகத் தெரிவித்தார்.
பல கலாசார சமூகத்தில் வாழ்வதால் நமக்குச் சிறப்பான வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.
சிங்கப்பூரர்களாகச் சேர்ந்து செயல்பட்டு பல கலாசார, சமய விழாக்களைக் கொண்டாடுவதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைப்பதாக அமைச்சர் கூறினார்.
பல்வேறு இன, சமய சமூகங்களைச் சேர்ந்த மக்கள், அவர்களின் நம்பிக்கை, பழக்கவழக்கங்கள் பற்றிய புரிந்துணர்வை ஆழப்படுத்துவதற்கு ஒருமித்த முயற்சிகளை நாம் அனைவரும் எடுக்க வேண்டும் என்று அமைச்சர் டோங் குறிப்பிட்டார்.
வலுவான சமூகத்தின் முதுகெலும்பாக இருக்கும் சமூக நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதில் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு என்றும் அவர் வலியுறுத்தினார்.
சமூகமும் சமய அமைப்புகளும் அமைச்சுடன் சேர்ந்து செயல்பட்டு பரந்த அளவில் சிங்கப்பூரர்களி டையே பல சமய புரிந்துணர்வை பலப்படுத்த முடியும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
கொவிட்-19 காரணமாக சிங்கப்பூரில் சமய வழிபாடுகள் மாற்றம் கண்டு இருப்பதைப் பற்றி குறிப்பிட்ட அமைச்சர் டோங், அமைச்சுடனும் போலிசோடும் சேர்ந்து செயல்பட்டு பாதுகாப்புடன் தீமிதித் திருவிழாவை நடத்தி தன் பாரம்பரியத்தை சைனா டவுன் ஸ்ரீ மாரியம்மன் கோயில் நிலைநாட்டியதைச் சுட்டிக்காட்டினார்.