விடாது கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) ஏற்பாட்டில் நடந்த பொங்கல் ஒளியூட்டு விழாவில் இன்று மாலை சமூகத்தினர் ஒன்றுகூடினர்.
கொவிட்-19 கிருமித் தொற்று கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப, 50 பேர் கிளைவ் ஸ்திரீட்டில் அமைக்கப்பட்ட சிறப்புப் பொங்கல் கூடாரத்தில் இவ்விழாவின் கலைநிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.
வீட்டிலிருந்தவாறு லிஷா ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து நிகழ்ச்சி நேரலையை காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக ‘லிஷா’வின் புதிய தலைவரும் பனானா லீஃப் அப்போலோ உணவக உரிமையாளருமான திரு சி.சங்கரநாதன் கூறினார்.
தமிழ் முரசிடம் பேசிய அவர், லிஷா முன்னின்று 21வது ஆண்டுகளாக பொங்கல் விழாவை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும் இவ்வாண்டு பொங்கல் திருநாள் நிகழ்ச்சிகள் இளையர்களை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக திரு சங்கரநாதன் தெரிவித்தார்.
தமிழ் கலாசார மரபுகளை இளையர்களிடம் சென்று சேர்ப்பதும் விழாவின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்றார் அவர்.
ஒளியூட்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான திரு எட்வின் டோங் கலந்துகொண்டார்.
கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சருமான எல்வின் டானும் நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தார்.
பொங்கல் தொடர்பில் இந்திய மரபுடைமை நிலையம் இம்மாதம் வரையில் ஏற்பாடு செய்திருக்கும் பொதுமக்களுக்கான நடவடிக்கைகளைப் பற்றிய மேல் விவரம் அறிய https://www.indianheritage.gov.sg/en என்ற இணையப் பக்கத்திற்குச் செல்லலாம்.