வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், வெளிநாட்டு ஓய்வூதியக் கணக்குகள் மூலம் சேர்த்த தொகைக்கு இரட்டை வரி விதிக்கும் முறையை ரத்து செய்ய இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிந்துரைத்து இருக்கிறார்.
2021-22ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தை நேற்று தாக்கல் செய்தபோது அமைச்சர் நிர்மலா இந்த யோசனையை முன்மொழிந்தார்.
“வெளிநாடுவாழ் இந்தியர்கள் நாடு திரும்பியபின், வெளிநாட்டு ஓய்வூதியக் கணக்குகள் மூலம் தாங்கள் சேர்த்த தொகை தொடர்பில் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். வழக்கமாக, வரிவிதிப்புக் காலத்தின் பொருத்தமின்மையால் இது எழுகிறது. அத்துடன், வெளிநாடுகளிலும் அவர்கள் வரி செலுத்த வேண்டியுள்ளது. ஆகையால், இரட்டை வரிவிதிப்பால் எதிர்கொள்ளும் சிரமங்களில் இருந்து அவர்களை விடுவிக்கும் வகையில் அம்முறையை ரத்து செய்யப் பரிந்துரைக்கிறேன்,” என்று அவர் தமது உரையின்போது குறிப்பிட்டார்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள், வெளிநாடுகளில் தாங்கள் ஈட்டிய வருமானத்திற்கு இந்தியாவில் வரிவிதிக்கப்படுவதில்லை. ஆயினும், இந்தியாவில் அவர்கள் ஈட்டும் வருமானத்திற்கு அவர்கள் வரி செலுத்த வேண்டும். அதாவது, இந்தியாவில் பெறும் ஊதியம், நிரந்தர வைப்புத்தொகை அல்லது சேமிப்புக் கணக்கு மூலம் கிடைக்கும் வருமானம், இந்தியாவில் உள்ள குடியிருப்புச் சொத்துகள் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்டவற்றுக்கு அவர்கள் வரி செலுத்த வேண்டும். இப்போதைக்கு, இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு உடன்பாட்டின்கீழ் அவர்கள் இருமுறை வரி செலுத்துவதில் இருந்து நிவாரணம் கோரலாம்.
ரூ.16.5 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு
வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ள புதிய நிதியாண்டில்
16.5 லட்சம் கோடி ரூபாய் விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் நிர்மலா தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 3,500 கி.மீ., தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி அடுத்த ஆண்டு தொடங்கப்படும். அதற்காக ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கப்படவுள்ளது.
அதுபோல, சென்னை மெட்ரோ ரயில் பணிகளின் இரண்டாம் கட்டமாக, ரூ.63,246 கோடி செலவில் 118.9 கி.மீ. தொலைவிற்கு இருப்புப் பாதை அமைக்கப்படும்.
கொரோனா தடுப்பூசித் திட்டத்திற்கு ரூ.35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படாததால் மாத ஊதியம் ஈட்டுவோர் ஏமாற்றமடைந்தனர்.
பொதுவாக, வேளாண்மை, சுகாதாரம், அடுத்து நடக்கவுள்ள ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.