கொவிட்-19க்கு எதிராக மலேசியாவில் தேசிய அளவிலான தடுப்பூசித் திட்டம் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியுள்ளது. ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
இதனால் அதன் தடுப்பூசித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அட்டவணையை அந்நாட்டு அரசாங்கம் முன்னுக்குக் கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
இதன்படி பொதுமக்களுக்கான தடுப்பூசித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை மலேசியா ஏப்ரல் மாத இறுதியில் நடைமுறைப்படுத்த இருக்கிறது.
அடுத்த இரண்டு மாதங்களில் தடுப்பூசிக்குப் பதிந்துகொள்வோர் விகிதம் மேம்படவில்லை என்றால் தடுப்பூசித் திட்டம் தொடர்பான கொள்கை மாற்றத்தை மலேசிய அரசாங்கம் பரிசீலிக்கும்.
கிருமித்தொற்று ஏற்படும் சாத்தியமுள்ள பிரிவினராக மலேசியாவின் மூத்த குடிமக்கள் அடையாளம் காணப்பட்டனர். இதைஅடுத்து, ஏப்ரல் மாத நடுப்பகுதியிலிருந்து அவர்களுக்கான இரண்டாம் கட்டத் தடுப்பூசித் திட்டத்தை மலேசியா நடைமுறைப்படுத்தியது.
ஆனால் மூன்றில் ஒரு முதியவர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பதிந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மலேசியாவின் 33 மில்லியன் மக்கள்தொகையில் 25 விழுக்காட்டுக்கும் குறைவானோரே தடுப்பூசிக்குப் பதிந்துள்ளனர்.
புத்ராஜயா பகுதியைத் தவிர, பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசிக்குப் பதிந்துகொள்ளும் விகிதம் 50 விழுக்காட்டைக்கூட எட்டவில்லை.
எதிர்வரும் ஜூலை மாதத்திலும் தடுப்பூசி தொடர்பான விகிதத்தில் முன்னேற்றம் இல்லை என்றால் தடுப்பூசிக் கொள்கையை அரசாங்கம் மறுஆய்வு செய்ய வேண்டி இருக்கும் என்று மலேசியத் தடுப்பூசித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதின் கூறினார்.
மலேசியா தனது தடுப்பூசி விநியோகத்தின் பெரும்பகுதியை ஜூலை மாதத்தில்தான் பெறவிருக்கிறது. மலேசிய மக்களில் 80 விழுக்காட்டினர் அதாவது 26.7 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போடுவதன் மூலம் இவ்வாண்டு இறுதிவாக்கில் கூட்டு நோயெதிர்ப்பு ஆற்றலைப் பெறும் இலக்கை மலேசியா கொண்டுள்ளது.
மலேசியாவில் தற்போது தடுப்பூசித் திட்டம் கட்டாயமாக்கப்படவில்லை.
எனினும், தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது.
மலேசியர்கள் அனைவருக்கும் போதுமான தடுப்பூசிகள் இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்துள்ளது. இதன்படி, பாதிப் பேருக்கு ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியும் மற்றவர்களுக்கு சீனாவின் சினோவேக் தடுப்பூசியும் போடப்படும்.