சக்கர நாற்காலியிலும் கைத்தாங்கலாகவும் நடமாடும் முதியவர்கள் உட்பட பலரும் ஹவ்காங் அவென்யூ 8ல் உள்ள புளோக் 506ன் வெற்றுத்தளத்தில் நேற்று பிற்பகலில் கொவிட்-19 பரிசோதனைக்குச் சென்றனர். பாதுகாப்பு நடவடிக்கையை முன்னிட்டு, ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் கட்டாய கிருமி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.
12 மாடிகளைக் கொண்ட இந்த புளோக்கில் மொத்தம் 116 வீடுகள் உள்ளன. இந்த புளோக்கில் வசிக்கும் சிலருக்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதைத் தொடர்ந்து இங்கு வசிக்கும் அனைவருக்கும் கிருமி பரிசோதனை செய்யப்படுகிறது. முழுமையான பாதுகாப்பு கவச உடை அணிந்த சுகாதார மேம்பாட்டு ஊழியர்கள் அங்கே இருந்தனர். எனினும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றோ அவர்களின் விவரங்களோ தெரியவில்லை என்று அங்கு குடியிருப்பவர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.
சோதனை முடிவுகள் தெரியும் வரையில் வீட்டிலேயே இருக்குமாறு அந்த புளோக்கில் வசிப்பவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளையும் சோதனை தொடரும் என்று சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் கூறியிருந்தது.
அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தம் சிங், ஜெரல்ட் கியாம் இருவரும் நேற்றுக் காலையில் அந்த புளோக்கிற்குச் சென்று குடியிருப்பாளர்களுடனும் சுகாதாரப் பணியாளர்களுடனும் விவரங்களைக் கேட்டறிந்தனர்.
கட்டாய கிருமி பரிசோதனை பற்றி அறிவிப்புகள் அந்த புளோக் கில் ஒட்டப்பட்டுள்ளன. நேற்று பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் கிருமி பரிசோதனை நடைபெறும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.