சிங்கப்பூர் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியாவது போட்டுக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
சுமார் 36 விழுக்காட்டு மக்கள் இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுவிட்டதாகவும் அவர் தமது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 கொள்ளை
நோயைச் சமாளிக்கும் விதமாக புதிய இயல்புநிலைக்குத் தயாராகும் உத்தியின் ஒரு பகுதியாக அண்மைய வாரங்களாக சிங்கப்பூரின் தடுப்பூசி நடவடிக்கை வேகமெடுத்து வருகிறது. குறிப்பாக, முதல் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு தேசிய தடுப்பூசித் திட்டம் முன்னுரிமை அளிக்கிறது.
கொரோனா கிருமித்தொற்றில் இருந்து குறைந்தபட்ச பாதுகாப்பை அதிகம் பேர் பெறும் நோக்கில் இவ்வாறு செய்யப்படுகிறது.
இது குறித்து நேற்று தமது ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஓங், "இதனை நாம் இன்னும் வேகமாகச் செயல்படுத்துவோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
"இயன்ற வரை நாம் வேகமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதேநேரம் உலக அளவில் தடுப்பூசிக்கான தேவை அதிகமாக இருப்பதால் அதன் விநியோகம் நம்மைக் கட்டுப்படுத்துகிறது. கூடிய சீக்கிரம் மேலும் அதிகமான தடுப்பூசிகளைப் பெறும் வண்ணம் விநியோக நடவடிக்கையை உறுதி செய்ய நம்மால் இயன்றதைச் செய்வோம்.
"எனவே, உங்களுக்கான முறை வரும்போது தயவுகூர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். அத்துடன் உங்களது நண்பகர்
களையும் குடும்பத்தினரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள்," என்று திரு வோங் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா கிருமித்தொற்று உலக மக்களிடையே தொடர்ந்து இருக்கும் என்பதன் மீது அனைத்துலக நிபுணர்களிடையிலான கருத்திணக்கம் அதிகரித்து வருவதாக நேற்று முன்தினம் திரு ஓங் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அதாவது, சளிக்காய்ச்சல் கிருமி போல கொரோனா கிருமி தொடர்ந்து உருமாற்றம் செய்துகொண்டு மக்களிடையே பரவியவண்ணம் இருக்கும் என்று கருதப்படுவதால் மக்கள் அதற்கேற்ற வகையில் தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டு அந்த சூழ்நிலை யோடு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதனை நேற்று தமது ஃபேஸ்புக் பதிவில் வலியுறுத்திய திரு ஓங், "பரிசோதித்தல், தொடர்புகளைக் கண்டறிதல், கொவிட்-19 தொற்றியவர்களைத் தனிமைப்
படுத்துதல் போன்ற நடவடிக்கை
களைக் கடந்த ஆண்டு முதல் சிங்கப்பூர் விரைவாகவும் திறம்படவும் செய்து வருகிறது. அத்துடன், சிறந்த எண்ணிக்கையிலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்," என்றார் அவர்.
மேலும் அவர் தெரிவிக்கையில், "இதுபோன்ற தற்காப்பு நடவடிக்கைகள் நடப்பில் இருப்பதால் 'சர்கிட் பிரேக்கர்' போன்ற கடும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உட்படாத வகையில் அதிக வர்த்தகங்களை மீண்டும் திறந்து நமது அன்றாட வாழ்க்கைக்கான நடவடிக்கைகளைத் தொடருவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
"இதில் இன்னும் நாம் முன்னோக்கிச் சென்று உணவு, பானக் கடைகளுக்கு உதவுவதோடு உடற் பயிற்சிக் கூடங்களைத் திறக்கவும் நமது பயண நடவடிக்கைகளை மீண்டும் தொடரவும் வேண்டு
மானால் தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும்.
"அப்போதுதான், கிருமி நமது சமூகத்தில் பரவினால்கூட நாம் சிறப்பான பாதுகாப்பைப் பெறுவோம்," என்று திரு வோங் விளக்கினார்.
கடந்த மே மாதம் சிங்கப்பூரில் டான் டோக் செங், சாங்கி விமான நிலையம் போன்ற கிருமித்தொற்றுக் குழுமங்கள் புதிதாக உருவெடுத்ததைத் தொடர்ந்து தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் நடப்புக்கு வந்தன.
இருப்பினும் கடந்த சில வாரங்களாக அதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக நாளை திங்கட்கிழமை முதல் இருவர் மட்டும் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கப்படுகிறது.
கொவிட்-19 தொற்றுக்கான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவரான திரு வோங் இதனை நேற்று முன்தினம் அறிவித்தார்.
கிருமித்தொற்றை மனதில் கொண்டு மக்கள் தங்களது பணி களை வழக்கம்போல தொடர தடுப் பூசி விகிதம் அதிகமாக வேண்டும் என பிரதமர் லீ சியன் லூங்கும் பணிக்குழுவினரும் மே மாத இறுதியில் கூறியிருந்தனர்.
வோங்: இரு ஊசிகளையும் போட்டுக்கொண்டோர் விகிதம் 36%