ஹவ்காங் அவென்யூ 8லும் தெம்பனிஸ் விரைவுச்சாலைக்கு இட்டுச்செல்லும் பொங்கோல் வே துணைச் சாலையிலும் இன்று (ஆகஸ்ட் 30) காலை திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
இன்று காலை பெய்த கனமழை காரணமாக தீவின் பல பகுதிகளிலும் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் நிலவியதாக பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அவ்விரு பகுதிகளிலும் மோட்டார் வாகனமோட்டிகள், பாதசாரிகளுக்கு உதவ அதிகாரிகள் பணியில் ஈடுபட்டதாக கழகம் கூறியது.
அப்பகுதிகளில் பின்னர் வெள்ளநீர் வடிந்துவிட்டதாக கழகம் கூறியது.
தீவின் பல பகுதிகளில் வடிகால்களிலும் கால்வாய்களிலும் மழைநீர் முழுக் கொள்ளளவை எட்டிவிட்டதாக அல்லது நெருங்கிவிட்டதாக கழகம் சொன்னது. பாலஸ்டியர் சாலை, தாம்சன் சாலை, அப்பர் பாய லேபார் சாலை, புக்கிட் தீமா சாலையில் உள்ள சிம் டார்பி சென்டர் உள்ளிட்டவை அப்பகுதிகளில் அடங்கும்.
சிங்கப்பூரின் மத்தியப் பகுதிகள் சிலவற்றிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.