சிங்கப்பூரை மீண்டும் திறப்பதில் இப்போதைய ஆயத்தநிலையே தொடரும் என்று நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
அண்மைய நாள்களாக கொவிட்-19 தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுக்குள் வைத்திருக்க தடுப்பூசி போடுவதையும் பரிசோதனை செய்வதையும் சார்ந்திருப்பது தொடரும்.
கொரோனாவுடன் வாழும் வகையில் நாடு மாறிவரும் நிலையில், இப்போதைக்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்தவோ கடுமையாக்கவோ திட்டம் இல்லை என்று அமைச்சர் வோங் கூறினார்.
கடைசி நடவடிக்கையாகவே கட்டுப்பாடுகள் மேலும் கடுமைப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது, அக்குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான அமைச்சர் வோங் இவ்வாறு சொன்னார்.
சமூகத்தில் இன்று புதிதாக 216 பேர்க்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் 109 பேர் தொடர்பற்ற வகையில் பாதிக்கப்பட்டவர்கள்.
முன்னதாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, கூடுதலானோர் வெளியில் செல்வதால் கொவிட்-19 தொற்றுப் பரவல் அண்மையில் அதிகரித்திருப்பது எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல என்றார் திரு வோங்.
நிலவரத்தை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வரும் அதே வேளையில், நாட்டின் தடுப்பூசி மற்றும் பரிசோதனை திட்டத்தையும் அது விரிவுபடுத்தும்.