பேருந்துச் சந்திப்பு நிலைய கொவிட்-19 தொற்றுக் குழுமங்களால் பயணிகளிடம் கொரோனா தொற்று பரவியதாக இதுவரை சான்று எதுவும் இல்லை என்று போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்து இருக்கிறார்.
இருப்பினும், பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படுவது உறுதிசெய்யப்படும் என்று திரு ஈஸ்வரன் கூறியுள்ளார்.
“இன்னும் அதிகம் செய்ய வேண்டுமெனில், அதன் தொடர்பில் நிலப் போக்குவரத்து ஆணையம், பொதுப் போக்குவரத்து சேவை வழங்குநர்களுடன் இணைந்து செயலாற்றும்,” என்றார் அமைச்சர்.
பிடோக்கில் உள்ள ஆணைய அலுவலகத்தில் ‘நிலப் போக்குவரத்து ஆணைய நாள்’ இன்று அனுசரிக்கப்பட்டபோது செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு சொன்னார்.
பொதுப் போக்குவரத்து ஊழியர்களின், பயணிகளின் பாதுகாப்பையும் பொதுப் போக்குவரத்து தொடர்ந்து இயங்குவதையும் உறுதிசெய்வதற்கு இப்போதைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
தோ பாயோ, பூன் லே, பொங்கோல், ஜூரோங் ஈஸ்ட், பீஷான், செங்காங், தெம்பனிஸ், கிளமெண்டி ஆகிய எட்டுப் பேருந்துச் சந்திப்பு நிலையங்கள் கிருமித்தொற்றுக் குழுமங்களாக உருவெடுத்துள்ளன.
நேற்றைய நிலவரப்படி, பேருந்துச் சந்திப்பு நிலைய கிருமித்தொற்றுக் குழுமங்களில் 341 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து ஓட்டுநர்களை எவ்வாறு கொரோனா தொற்றியது என்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் இன்னும் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
“சமூகத்தில் இருந்து அவர்களைக் கிருமி தொற்றியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. அதே வேளையில், சில நடவடிக்கைகளை அவர்கள் இணைந்து மேற்கொள்வதால் பணியிடத்திலும் கொரோனா பரவி இருக்க வாய்ப்புள்ளது,” என்றார் அவர்.
இப்போதைக்கு பேருந்து சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று அவர் சொன்னார்.
“அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம். பேருந்து ஓட்டுநர்கள் தங்களது பணியை ஆற்ற நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் தங்களது பணியைப் பாதுகாப்பாக மேற்கொள்ள முடிய வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டி உள்ளது,” என்று திரு ஈஸ்வரன் கூறினார்.
பேருந்துச் சந்திப்பு நிலையங்களில் கிருமி பரவும் அபாயத்தைக் குறைக்க நிலப் போக்குவரத்து ஆணையம் பல புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, பேருந்துச் சந்திப்பு நிலையங்களில் பணியாளர்கள் ஓய்வெடுக்கும் இடமும் உண்ணும் இடமும் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு மேசையில் ஒருவர் மட்டுமே அமர்ந்து உண்ணலாம்.
கிருமிப் பரவலை விரைந்து கண்டறிய ஏதுவாக, பேருந்து ஓட்டுநர்களும் சந்திப்பு நிலையங்களில் உள்ள முகப்பு ஊழியர்களும் குறைந்தது வாரம் ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.