மாநிலங்களுக்கு இடையிலான பயணங்கள் மீது விதித்திருந்த தடையை மலேசியா அடுத்த மாதம் முதல் நீக்கவுள்ளதாக எதிர்பார்ப்புகள் நிலவி வரும் வேளையில், நாட்டின் எல்லைகளைத் திறப்பது குறித்தும் அது பரிசீலிப்பதாக மலேசிய நாளிதழான 'தி ஸ்டார்' தெரிவித்துள்ளது. தேசிய மீட்சி மன்றத்தின் தலைவர் முகைதீன் யாசின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக அந்த நாளிதழ் தெரிவித்தது.
கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள மலேசியர்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதை அனுமதிப்பது குறித்து அமைச்சர்கள் இவ்வாரம் பரிசீலிக்க உள்ளனர். அத்துடன் மலேசியாவுக்குள் சுற்றுப்பயணிகளையும் வர்த்தகப் பயணிகளையும் அனுமதிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்று நேற்று முன்தினம் மன்றச் சந்திப்புக் கூட்டத்திற்குப் பின் திரு முகைதீன் தெரிவித்தார். இந்த விவகாரம் பின்னர் பிரதமரிடம் கொண்டு செல்லப்படும் என்றும் விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் மாதத் தொடக்கத்துக்குள் மலேசியாவில் 90% பெரியவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் மன்றத்திடம் தெரிவித்ததாக திரு முகைதீன் செய்தியாளர் கூட்டத்தில் பகிர்ந்துகொண்டார். இது அக்டோபர் மாத இடையிலேயே மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களைத் தொடங்குவதற்குத் தோதாக இருக்கும். இதுவரை, மலேசியாவில் கிட்டத்தட்ட 85% பெரியவர்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. இந்நிலையில், கொவிட்-19 சம்பவங்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் பயன்படுத்தப்படும் படுக்கைகளின் விகிதம் குறித்து கைரி ஜமாலுதீன் அளித்துள்ள தகவல், தேசிய மீட்சி மன்றத்திற்குத் திருப்தி அளிப்பதாக உள்ளதென திரு முகைதீன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று மலேசியாவில் மேலும் 11,332 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது. கடந்த சில நாட்களாக தினமும் பதிவாகி வந்த கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை இறங்குமுகமாக இருந்த நிலையில், நேற்று மீண்டும் அதிகரித்தது. சரவாக் மாநிலத்தில் ஆக அதிகமாக 2,358 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.