சிங்கப்பூரில் தினமும் பதிவாகும் கொவிட்-19 தொற்று எண்ணிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் 5,000ஐ தொடக்
கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் நோய் தொற்றும் பொதுமக்களில் பெரும்பாலானோருக்கு, அதாவது 98 விழுக்காட்டினருக்கு இலேசான அறிகுறி காணப்படலாம் அல்லது அறிகுறி எதுவும் காணப்படாமல் போகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருமியுடன் வாழ்வதற்கேற்ற அணுகுமுறையை நாடு பின்பற்றத் தொடங்கும் நிலையில், தற்போதைய நிலவரத்தை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும் வகையில் அதிகாரிகள் பெரிய அளவிலான மறுஆய்வை நடத்தியதன் விளைவாக இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதாரப் பராமரிப்பு தொடர்பான அனைத்துவித நெறிமுறைகளையும் அவர்கள் ஆராயந்தனர்.
கடுமையாகப் பாதிப்படுவோருக்காக மருத்துவமனை படுக்கைகளை அதிகரிக்கும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இவர் களுக்கு அணுக்கக் கண்
காணிப்பு தேவைப்படும்.
கடந்த வாரத்தில் கொவிட்-19 சிகிச்சை மையங்களில் 580 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. இதுபோன்ற ஒன்பது சிகிச்சை மையங்களில் படுக்கைகளின் எண்ணிக்கையை இந்த மாத இறுதிக்குள் 3,700க்கு உயர்த்த சுகாதார அமைச்சு திட்டமிடுகிறது.
இதுதான் சிங்கப்பூருக்கு ஏற்பட்டிருக்கும் 'மிகப்பெரிய நெருக்கடி' என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார். கொவிட்-19 நிலவரத்தைக் கையாளும் அமைச்சுகள்நிலை பணிக்குழு மெய்நிகர் வழியாக நேற்று செய்தியாளர்
களைச் சந்தித்த போது பல தகவல்களை அவர் வெளியிட்டார்.
தற்போது கொவிட்-19 சிகிச்சைக்கான படுக்கைகளின் எண்ணிக்கை பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், மருத்துவ
மனைப் பராமரிப்பு தேவைப்படாத பல நோயாளிகள் மருத்துவமனை யில் சேருவதாகவும் திரு ஓங் தெரிவித்தார்.
தற்போது வெவ்வேறு வகையான பரிசோதனை முறைகளும் தனிமைப்படுத்தும் நெறிமுறைகளும் பின்பற்றப்படுவதை ஒப்புக்கொண்ட அமைச்சர், அமைச்சுகள்நிலை பணிக்குழு இதனை முழுமையாக மறுஆய்வு செய்து எளிதாகப் புரிந்துகொள்ளக்
கூடிய, நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய நெறிமுறைகளை வகுக்கும் என்றார்.
தற்போதைய நிலையில் 56 விழுக்காட்டு நோயாளிகள் தங்களது வீடுகளில் குணமடைந்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கை இனி வரும் வாரங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள இயலாத 6 விழுக்காட்டினர் சமூகப் பராமரிப்பு மையங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். வெளிநாட்டு ஊழியர் போன்ற இதர 13 விழுக்காட்டினர் மற்ற சிகிச்சை மையங்களில் குணமடைந்து வருகிறார்கள்.
மொத்த கொவிட்-19 நோயாளிகளில் முக்கால்வாசிப் பேர் குணமடைந்து வருவதை இது காட்டுகிறது என்றும் இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படும் அவசியம் ஏற்படாதவர்கள் என்றும் செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற இணைப் பேராசிரியர் கென்னத் மாக் தெரிவித்தார்.
சிகிச்சை மையங்களில் படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை