சிங்கப்பூரில் மயில்களைச் செல்லப் பிராணிகளாக வளர்க்கலாம் என்றும் அவற்றின் உரிமையாளர்கள் விதிமுறைகளுக்கு இணங்கி நடக்க வேண்டும் என்றும் தேசிய பூங்காக்கள் கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிறு நவம்பர் 28 அன்று சிராங்கூன் கார்டன் பகுதியில் மூன்று வயதுச் சிறுமியை மயில் கொத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அண்டைவீட்டுக்காரர் ஒருவர் செல்லப் பிராணியாக வளர்க்கும் மயில் கொத்தியதால் சிறுமியின் முகத்தில் தையல்கள் போடப்பட்டன.
சிராங்கூன் கார்டன், ஹாஸ் பூங்கா பகுதியில் உள்ள விளையாட்டுத் திடலில் இருந்து தன் தந்தை, சகோதரனுடன் அச்சிறுமி வீடு திரும்பிக்கொண்டிருந்தார். .
மயிலைக் கண்டு ரசிப்பதற்காக ஒரு வீட்டிற்கு வெளியே நின்றபோது அது சிறுமியைத் தாக்கியதாக அவருடைய தாயார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் விவரித்து இருந்தார்.
அந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக தேசிய பூங்காக்கள் கழகம் இன்று (டிசம்பர் 2) குறிப்பிட்டது.
மேலும், கோழி, வாத்து, வான்கோழி, காடை, கௌதாரி, செம்போத்து என அழைக்கப்படும் காட்டுக்கோழி, வீட்டுப்புறா, கினி கோழி, அன்னம், மயில் போன்றவற்றை செல்லப் பிராணிகளாக வளர்க்கலாம் என்று பூங்காக்கள் கழகம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் விளக்கியது.
அதே வேளையில், ஒருவர் பத்துக்கும் மேற்பட்ட இத்தகைய செல்லப் பிராணிகளை வளர்க்கக்கூடாது.