உலகின் 57 நாடுகளில் கொவிட்-19 உருமாறிய ஓமிக்ரான் கிருமி தொற்றி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கிருமித்தொற்று கூடுவதால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அபாய சங்கு ஊதி இருக்கிறது.
ஓமிக்ரானின் பாதிப்பு எந்த அளவுக்குக் கடுமையாக இருக்கும் என்பதை மதிப்பிட மேலும் தகவல்கள் தேவை என்று அந்த அமைப்பு தன்னுடைய வாராந்திர தொற்று அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
தடுப்பூசி மூலம் கிடைக்கும் பாதுகாப்பை அந்தக் கிருமி குறைத்துவிடுமா என்பதும் இனிமேல்தான் தெரியவர வேண்டும் என்று அறிக்கை கூறியது.
ஓமிக்ரானின் கடுமை டெல்டா கிருமி அளவுக்கு அல்லது அதைவிட குறைவாக இருந்தாலும்கூட, மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெற வேண்டிய தேவை உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும். ஓமிக்ரான் தொற்று கூடும்போது இது தவிர்க்க முடியாததாக ஆகிவிடும் என்று தெரிவித்த உலக நிறுவனம், தொற்று அதிகரிப்பிற்கும் மரண அதிகரிப்பிற்கும் இடையில் கால இடைவெளி இருக்கும் என்றும் குறிப்பிட்டது.
ஓமிக்ரான் கிருமி முதன்முதலாக தென் ஆப்பிரிக்காவில் தலைதூக்கியது. அந்தக் கிருமி கவலை தரும் ஒன்று என்று நவம்பர் 26ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
தென்னாப்பிரிக்காவில் டிசம்பர் 5 வரை யிலான ஒருவார காலத்தில் ஓமிக்ரான் தொற்று இரண்டு மடங்காகி இருக்கிறது. அங்கு 62,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதர ஆப்பிரிக்க நாடுகளில் மிக அதிகளவில் தொற்று எண்ணிக்கை கூடியுள்ளது.
அதிகமான பரிசோதனைகள், குறைந்த தடுப்பூசி விகிதம் ஆகியவை காரணமாக ஓமிக்ரான் தொற்று எண்ணிக்கையில் தாக்கம் ஏற்படும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டது.
ஃபைசர் பயோஎன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசி மூலம் கிடைக்கும் பாதுகாப்பில் இருந்து ஓமிக்ரான் கிருமி ஓரளவுக்குத் தப்பிவிடும் என்று ஆப்பிரிக்க சுகாதார ஆய்வுக் கழகத்தில் உள்ள ஆய்வகம் ஒன்றின் தலைவர் அண்மையில் தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, ஓமிக்ரான் கிருமி, உருமாறிய இதர கொவிட்-19 கிருமி அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தாது என்று உலக சுகாதார நிறுவனத்தின் உயர்நிலை அறிவியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அதேபோன்றே அமெரிக்காவும் கூறியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டு இருக்கிறது.
இருந்தாலும் ஓமிக்ரான் பாதிப்பு எந்த அளவுக்குக் கடுமையாக இருக்கும் என்பதை மதிப்பிட மேலும் ஆய்வுகள் தேவைப்படுவதாக அறிவியல் அறிஞர்கள் எச்சரிக்கையுடன் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். ஓமிக்ரான் தொற்றைத் தடுக்கும் வகையில் பல நாடுகளும் மீண்டும் எல்லைக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன.