ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அதனால் பேராபத்தை விளைவிக்கக்கூடிய ஆழிப் பேரலைகள் (சுனாமி) உருவாக வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிரீன்விச் நேரப்படி இன்று காலை 3.20 மணிக்கு, மௌமெரே நகருக்கு வடக்கே 100 கிலோமீட்டர் தொலைவில், ஃபுளோரெஸ் கடலில் 187.5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அவ்வமைப்பு கூறியது.
நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 1,000 கிலோமீட்டருக்குள் உள்ள கடலோரப் பகுதிகளை ஆழிப் பேரலைகள் தாக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்து இருக்கிறது.
இருப்பினும், உயிருடற்சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவுதான் என்று அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
மலுக்கு, கிழக்கு நூசா தெங்கரா, மேற்கு நூசா தெங்கரா, தென்கிழக்கு மற்றும் தெற்கு சுலவேசி ஆகிய பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“எல்லாருமே வீதிக்கு ஓடிவந்துவிட்டோம்,” என்றார் மௌமெரே நகரைச் சேர்ந்த அகஸ்டின்ஸ் ஃபுளோரியானஸ் என்ற குடியிருப்பாளர்.
முதல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, லரன்டுக்கா பகுதியில் 5.6 ரிக்டர் அளவில் பின்னதிர்வு ஏற்பட்டதாக இந்தோனீசியா குறிப்பிட்டது.
“மேலும் கீழுமாக ஓர் அலையடிப்பதுபோல உணர்ந்தேன்,” என்று லரன்டுக்காவைச் சேர்ந்த ஸக்கரியாஸ் ஜென்டனா கெரன்ஸ் சொன்னதாக ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி கூறியது.
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி சுமத்ராவில் 9.1 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டு, அதனைத் தொடர்ந்து உருவான ஆழிப் பேரலைகளால் இந்தோனீசியாவில் 170,000 பேர் உட்பட அவ்வட்டாரத்தில் 220,000 பேர் மாண்டுபோனது குறிப்பிடத்தக்கது.
அது, மனிதகுல வரலாற்றில் பேரழிவை ஏற்படுத்திய இயற்கைப் பேரிடர்களில் ஒன்றாக அமைந்துவிட்டது.