ஆண்கள் டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஆட்டக்காரரான நோவேக் ஜோக்கோவிச் , வரும் திங்கட்கிழமை வரை ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவர் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி கோரி அவரது வழக்கறிஞர்கள் தொடுத்த வழக்கில் மெல்பர்ன் நீதிமன்றம், அந்த தீர்ப்பை வழங்கியது.
ஆஸ்திரேலிய டென்னிஸ் பொதுவிருதுப் போட்டியில் கலந்துகொள்ள கொவிட்-19 விதிமுறைகளிலிருந்து தமக்கு மருத்துவ விலக்கு அளிக்கப்பட்டதாக ஜோக்கோவிச் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சில நாள்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
அந்த முடிவு ஆஸ்திரேலியாவிலும் வெளிநாடுகளிலும் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஜோக்கோவிச்சுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதற்கு பரவலான எதிர்ப்பு கிளம்பியது.
புதன்கிழமை இரவு மெர்பர்னில் தரையிறங்கிய அவர் பல மணிநேரம் விமான நிலையத்திலேயே காக்க வைக்கப்பட்டார்.
பின்னர் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ஜோக்கோவிச் மெல்பர்னில் உள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார்.
அவரை நாடுகடத்த ஆஸ்திரேலிய அதிகாரிகள் எடுத்த முடிவை எதிர்த்து அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.
தமக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதா இல்லையா என்பதை ஜோக்கோவிச் பொதுவெளியில் தெரிவிக்க மறுத்துள்ளார்.
ஆனால் அவர் முன்னதாக கட்டாயத் தடுப்பூசிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.
அந்தச் சம்பவம் பற்றி வியாழக்கிழமை (ஜனவரி 6) அன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பேசினார்.
கொவிட்-19 நுழைவுக் கட்டுப்பாடுகளிலிருந்து மருத்துவ விலக்கு அளிப்பதற்கு போதுமான சான்றுகளை ஜோக்கோவிச் ஒப்படைக்கவில்லை என்று திரு மோரிசன் கூறினார்.
யாருக்கும் சிறப்புச் சலுகை அளிக்கப்படாது என்று அவர் முன்னதாக தமது டுவிட்டர் தளத்தில் கூறினார்.
ஜோக்கோவிச்சின் தாய்நாடான செர்பியா ஆஸ்திரேலியாவின் முடிவைக் கண்டித்தது.
ஜோக்கோவிச் ஆஸ்திரேலியாவில் தங்கலாமா முடியாதா என்பது குறித்த வழக்கு வரும் திங்கள் (ஜனவரி 10) அன்று மீண்டும் விசாரிக்கப்படும்.