பிரிட்டனில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150,000ஐத் தாண்டிவிட்டது.
அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, மெக்சிகோ, பெரு ஆகிய நாடுகளுக்குப் பிறகு 150,000 கொவிட்-19 மரணங்கள் பதிவான 7வது நாடு பிரிட்டன்.
இதன் தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், "கொவிட்-19 தொற்று நம் நாட்டில் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திவிட்டது. அந்த எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) 150,000ஐக் கடந்துவிட்டது," என்று கூறியுள்ளார்.
அங்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 28 நாள்களுக்குள் மாண்டவர்களின் எண்ணிக்கை 150,057ஐ எட்டிவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, முன்னில்லாத அளவாக பிரிட்டனில் கடந்த வாரம் ஒருநாள் தொற்று எண்ணிக்கை 200,000க்குமேல் பதிவானது. அண்மைய நாள்களாக அந்த எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அங்கு மேலும் 146,390 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, குழந்தைகள் பள்ளிகளில் இருக்கும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது போன்ற புதிய விதிமுறைகள் பிரிட்டனில் அறிவிக்கப்பட்டன.
பெருகிவரும் கிருமித்தொற்றாலும் பலரும் தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதாலும் சுகாதாரத் துறை உட்பட எல்லாத் துறைகளிலும் ஆட்பற்றாக்குறை நிலவுகிறது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனைகளில் ஊழியர்களுக்கு உதவ தனது படையினரை அனுப்புவதாக கடந்த வெள்ளிக்கிழமை பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சு அறிவித்தது.
முந்திய கொவிட்-19 தொற்று அலைகளைக் காட்டிலும் இப்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதும் உயிரிழப்பதும் வெகுவாகக் குறைந்துள்ளது. தடுப்பூசிகளே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இதனால், கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி பொதுமக்களை பிரிட்டிஷ் அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.
அங்கு 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுவரை ஏறக்குறைய 61 விழுக்காட்டினர் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்டனர்.