இந்தியாவில் மரணமடைந்த கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 500,000ஐத் தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கையை சென்ற ஆண்டே இந்தியா தொட்டுவிட்டது என்று பல வல்லுநர்கள் கருதுகின்றனர். கிருமித்தொற்றுக்கு ஆளாகி மரணமடைந்தோரின் எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டதைவிட மிகவும் அதிகம் என்பது அவர்களின் கருத்து.
மரணமடைந்தோரின் எண்ணிக்கையைக் கணிக்கும் கருத்தாய்வுகளின் முடிவுகள் உண்மையான நிலவரத்தை எடுத்துக்காட்டவில்லை என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர். சென்ற ஆண்டு ஜூலை மாதத்திலேயே இந்தியாவின் கொவிட்-19 மரண எண்ணிக்கை 400,000ஐத் தொட்டது.
"நாங்கள் 'ஜர்னல் சையன்ஸ்'ஸில் வெளியிட்ட ஆய்வின் முடிவுகளின்படி 2021ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இந்தியாவில் கொவிட்-19 மரண எண்ணிக்கை மூன்று மில்லியன் என்று கணிக்கப்பட்டுள்ளது," என்று அகமதாபாத்தில் உள்ள இந்திய நிர்வாகக் கழகத்தின் துணை பேராசிரியர் சின்மய் தும்பே கூறினார். இந்த ஆய்வை அவர் இணைந்து நடத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சென்ற மாதம் இந்திய அரசாங்கம் இந்த ஆய்வை நிராகரித்தது. ஆய்வு உண்மையான நிலவரத்தைத் தெரியப்படுத்தவில்லை என்றும் பிறப்பு, இறப்பு விகிதத்தைக் கணக்கிட தரமான முறை நடப்பில் இருப்பதாகவும் இந்திய அரசாங்கம் கூறியது.
இந்தியாவின் மாநிலங்களில் உள்ள வட்டாரங்களில் கொவிட்-19க்குப் பலியானோரின் எண்ணிக்கை கணக்கிடப்படும். அந்த எண்ணிக்கையைக் கொண்டு ஒரு மாநிலத்தில் பதிவாகும் மரண எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும்.
கடந்த சில மாதங்களாக பல மாநிலங்களில் மரணமடைந்த கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை பதிவுசெய்து வரப்படுகிறது.
இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் நெருக்குதலைத் தொடர்ந்து மாநிலங்கள் அவ்வாறு செய்கின்றன.
இந்தியா தற்போது தனது மூன்றாவது கொவிட்-19 அலையை எதிர்கொண்டு வருகிறது. சமூக அளவில் கிருமி பரவத் தொடங்கிவிட்டதாக சில முன்னணி வல்லுநர்கள் கூறுகின்றனர். எனினும், கிருமித்தொற்றுக்கு ஆளான பலருக்கு நோய்க்கான அறிகுறிகள் மோசமாக இல்லை என்று அரசாங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கொவிட்-19 பரிசோதனை விதிமுறைகளை இந்திய அரசாங்கம் சென்ற மாதம் தளர்த்தியது. கிருமித்தொற்றுக்கு ஆளானோருடன் நெருங்கிய தொடர்புடையோருக்குப் பரிசோதனைகளை மேற்கொள்ளத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. வயதானவர்கள், இதர மருத்துவப் பிரச்சினைகள் இருப்பவர்கள் ஆகியோர் இதற்கு விதிவிலக்கு.