கொவிட்-19 தொடர்பான எல்லைக் கட்டுப்பாடுகள் உலகின் பெரும்பாலான பகுதிகளில் அகற்றப்பட்டநிலையில் சிங்கப்பூருக்குள் வரும், சிங்கப்பூரிலிருந்து செல்லும் வர்த்தகப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இருப்பினும் முழுமையான மீட்சிக்கு இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருக்க வேண்டும் என பல்வேறு தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சீனாவின் எல்லைக் கட்டுப்
பாடுகள் கடினமாகி இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
கிருமிப் பரவல் புதிய அலை காரணமாக சீனாவின் எல்லைகள் இன்னும் முழுமையாகத் திறக்கப்படவில்லை. மெய்நிகர் நிகழ்வுகள் இன்னும் அங்கு தொடருகின்றன.
இருப்பினும், மற்ற நாடுகளில் இருந்து அதிகமானோர் வருகின்றனர். கொள்ளைநோய் பரவத் தொடங்கியதற்குப் பின்னர் இப்போதுதான் ஆக அதிகமான வர்த்தகப் பயணங்கள் மேற்கொள்ளப்
படுவதாக வர்த்தகப் பயண நிர்வாக நிறுவனமான சிடபிள்யூடி தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டின் தொடக்கப் பகுதியோடு ஒப்பிடுகையில் சிங்கப்பூரில் இருந்து மேற்கொள்ளப்படும் வர்த்தகப் பயணங்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு கூடியிருப்பதாக இந்நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் வட்டார விற்பனைப் பிரிவுத் தலைவர் அக்ஷய் கபூர் தெரிவித்து உள்ளார்.
அதேபோல சிங்கப்பூருக்கு மேற்கொள்ளப்படும் வர்த்தகப் பயணங்
களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்திருப்
பதாகவும் அவர் கூறினார்.
ஏப்ரல் முதல், கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட எல்லா நாட்டுப் பயணிகளுக்கும் சிங்கப்பூர் அதன் எல்லைகளைத் திறந்து விடுவதாக மார்ச் 24ஆம் தேதி அறிவித்தது.
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து பயணத் துறை முன்பதிவுகள் மீட்சி காணத் தொடங்கின.
"மெய்நிகர் சந்திப்புகளில் சில நன்மைகள் இருந்தபோதிலும் நேருக்கு நேர் அமர்ந்து பேசு
வதற்கு அது நிகராகாது," என்று வர்த்தகப் பயணங்கள் கூடுவதற்கான காரணங்களை விளக்கியபோது திரு அக்ஷய் குறிப்பிட்டார்.
மற்றொரு பயண நிறுவனத்தைச் சேர்ந்த சங்கமித்ரா போஸ், இவ்வாண்டின் ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகப் பயணத்தின் அளவு 2019ஆம் ஆண்டின் 40 விழுக்காட்டை நெருங்கியதாகக் கூறினார்.
'அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் குளோபல் பிசினஸ் டிராவல்ஸ்' நிறுவனத்தின் சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் தாய்லாந்து பிரிவுக்கான பொது மேலாளராகவும் துணைத் தலைவராகவும் உள்ளார் திருவாட்டி சங்கமித்ரா.
ஏப்ரல் மாத பயண வர்த்தகம் மற்ற மாதங்களைக் காட்டிலும் அதிகம் என்றார் அவர். குறிப்பாக, இவ்வாண்டின் மார்ச் மாதம் வரையில் செய்யப்பட்ட பயண முன்பதிவுகள் 2019ஆம் ஆண்டின் 20 விழுக்காடு அளவு மட்டுமே இருந்ததாக அவர் கூறினார்.
உலகின் பெரும்பாலான நாடு கள் கொள்ளைநோயுடன் வாழும் கட்டத்திற்கு வரும் மனநிலையில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இருப்பினும், இடையூறுகளும் நிச்சயமற்ற தன்மையும் குறுகிய காலத்திற்குத் தொடரக்கூடும் என்றார்.
சிங்கப்பூர் வர்த்தகக் கூட்டமைப்பின் தலைமை நிர்வாகியான லாம் யி யங், தமது வர்த்தகக் குழுவிலுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் வர்த்தகப் பயணத்தை மீண்டும் தொடங்குவதில் சுறுசுறுப்புடன் இயங்கிவருவதாகச் சொன்னார்.
இந்தக் குழு உறுப்பினர்கள் சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களில் முதல் 20 விழுக்காட்டைப் பிரதிநிதிக்கின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்குப் பயணமாவதாக திரு லாம் கூறினார்.
இந்த வர்த்தகப் பயண மீட்சியின் வேகம் வரும் மாதங்களிலும் தொடரும் என்று விமானத் தரவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான ஓஏஜி ஏவியேஷன் நிறுவனத்தின் ஆசிய வட்டாரத் தலைமை நிர்வாகி மயூர் பட்டேல் கூறியுள்ளார்.
இருப்பினும், பெருநிறுவனங்கள் தங்களது பயணத்துக்கான நிதி ஒதுக்கீட்டை மாற்றியமைத்து வருவதால், சில மாதங்களுக்குப் பின்னர் உலகளாவிய பயணங்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் ஏற்படாது என்று தாம் கருதுவதாக திரு பட்டேல் குறிப்பிட்டார்.