இலங்கையில் புதிதாக பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்கே, 73, ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க முடியாமல் திணறுகிறார்.
நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்க முக்கியமான மூத்த எதிர்த்தரப்பு தலைவர் மறுத்துவிட்டார்.
இருந்தாலும் புதிய அரசாங்கத்தை அமைக்கத் தனக்குப் போதிய ஆதரவு இருக்கிறது என்றும் பல அமைச்சர்களைத் தான் அணுகி வருவதாகவும் ரணில் நேற்று தெரிவித்தார்.
இலங்கை வரலாறு காணாத அளவுக்குப் பொருளியல் நெருக்கடியில் சிக்கி நொடித்துப் போகும் நிலைமைக்கு வந்துவிட்டது.
பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகிவிட்டார். அதிபர் கோத்தபாய ராஜபக்சேவும் விலக வேண்டும், புதிய அரசாங்கம் அமைய வேண்டும் என்று தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவை வன்செயல் போராட்டங்களாக மாறிவிட்டன.
இந்த நிலையில், அதிபரின் கோரிக்கையை ஏற்று புதிய பிரதமராக ரணில் பதவி ஏற்றுக்கொண்டார். நிதி அமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்று ரணில் விடுத்த வேண்டுகோளை ஹர்ஷா டி சில்வா நிராகரித்துவிட்டார். அரசாங்கம் விலக வேண்டும் என்பதே தன்னுடைய நிலைமை என்றார் அவர்.
அதிபர் கோத்தபாய ராஜபக்சேவை பதவியில் இருந்து அகற்ற மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. அதில் தான் சேரப்போவதாக டி சில்வா தெரிவித்துவிட்டார்.
நாடாளுமன்றத்தில் ஆகப் புதிய எதிர்க்கட்சியாக இருக்கும் எஸ்ஜேபி கட்சியைச் சேர்ந்தவர் டி சில்வா என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் பதவி விலகாமல் ஐக்கிய அரசாங்கம் அமைய ஆதரவு அளிப்பதா, வேண்டாமா என்பதன் தொடர்பில் எஸ்ஜேபி கட்சி இன்னமும் ஒரு முடிவு எடுக்கவில்லை.
இதனிடையே, பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்கே, இலங்கை பிரச்சினை வரும் மாதங்களில் இன்னும் மோசமடையக்கூடும் என்றும் அதைத் தடுக்க அனைத்துலக உதவி தேவை என்றும் குரல் கொடுத்தார்.
மக்களுக்கு மூன்று வேளை உணவு மீண்டும் கிடைக்கக்கூடிய ஒரு நிலைக்கு நாடு திரும்ப வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இவ்வேளையில், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேற நீதிமன்றம் தடைவிதித்து இருக்கிறது. அவர், இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள திருகோணமலை கடற்படைத் தளத்தில் பாதுகாப்பாகத் தங்கி இருக்கிறார் என்று தகவல்கள் கூறின.
இலங்கை ராணுவம் ஓரளவு அமைதியை நிலைநாட்டி இருக்கிறது. ரணில் விக்ரமசிங்கே மேற்கத்திய சுதந்திரமான பொருளியல் சந்தை ஆதரவாளர்.
அவர், அனைத்துலக பண நிதியம் உள்ளிட்ட அமைப்புகளுடன் நல்ல முறையில் பேசி பலனுள்ள நடவடிக்கைகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதவி விலகும்படி மக்கள் விடுக்கும் கோரிக்கையை அதிபர் இதுநாள் வரை தொடர்ந்து நிராகரித்து வருகிறார். புதிய பிரதமர் பதவி ஏற்று புதிய அமைச்சரவை அமைக்க முயன்று வந்தாலும் தாங்கள் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்று ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவித்துள்ளனர்.