இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் முண்ட்கா என்னும் பகுதியில் மூன்று மாடி வணிக வளாகக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் கருகி மாண்டுவிட்டனர்.
பலர் காயமடைந்த நிலையில் கட்டடத்திலிருந்து 70 பேருக்கும் மேல் மீட்கப்பட்டனர். 29 பேரைத் தேடும் பணி நடைபெறுவதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் ேநற்று பிற்பகலில் கூறினர்.
தீ விபத்து நிகழ்ந்த கண்காணிப்பு கேமரா தயாரிக்கும் கடையின் உரிமையாளர்களான ஹரிஷ் கோயல், வருண் கோயல் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தீத்தடுப்பு மற்றும் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யாத காரணத்திற்காக கட்டட ஊரிமையாளரான மணீஷ் லக்ரா தேடப்பட்டு வருகிறார்.
மாலை 4.40 மணியளவில் கட்டடத்தின் முதல் தளத்தில் கண்காணிப்பு கேமரா தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலகத்தில் தீப்பற்றி மற்ற பகுதிகளுக்குப் பரவியதாக முதல்கட்டத் தகவல் கூறியது.
இரண்டாவது தளத்தில் சமூக நிகழ்ச்சி ஒன்றில் பலர் பங்கேற்றிருந்தபோது தீ அங்கும் பரவியது.
மாண்டோரில் பலர் அந்தத் தளத்தில் இருந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
கட்டடத்தின் எல்லாப் பகுதி
களுக்கும் பரவி கட்டுக்கடங்காமல் எரிந்த தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் இரவு 10.30 மணிவரை சுமார் ஆறு மணி நேரம் போராடியதாகவும் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்ததாகவும் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறினார்.
பலியானோரில் இருவர் தீயணைப்பு வீரர்கள் என்று சில ஊடகங்கள் தெரிவித்தன.
முதல் இரண்டு தளங்களில் சிக்கி இருந்தவர்கள் எல்லோரும் மீட்கப்பட்டுவிட்டனர். மூன்றாவது தளத்தில் சிக்கி இருப்பவர்களைத் தேடி மீட்கும் பணி நேற்று மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது. அந்தப் பணியில் பெரிய பாரந்தூக்கி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
ஆனாலும் உள்ளே இடிபாடுகள் மோசமாக இருப்பதால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. தீ விபத்தின் போது மூன்றாவவது தளத்தில் கடுமையான புகை மண்ட லம் சூழ்ந்தது.
12 மணி நேரத்திற்கும் மேலாக இவர்கள் உள்ளேயே இருந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு மோசமான தீக்காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவின ரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கூறினர்.
தீச்சம்பவம் குறித்து அறிந்த அதிபர் ராம்நாத் கோவிந்தும் பிரதமர் நரேந்திர மோடியும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
அந்தக் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று திரு மோடி அறிவித்தார்.
விபத்து நிகழ்ந்தது எவ்வாறு என்று டெல்லி காவல்துறை விசா ரித்து வருகிறது.