கடலில் குப்பை சேரும் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சிகளை சிங்கப்பூர் தீவிரப்படுத்துகிறது. இதற்காக நேற்று தேசிய உத்தி செயல்திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது. கடலில் குப்பை சேரும் பிரச்சினை பெரிதாகி வருகிறது.
தேசிய சுற்றுப்புற வாரியம் 2021ல் 10 கடற்கரைகளிலும் கடலோரப் பகுதிகளிலும் பிளாஸ்டிக் போத்தல்கள், நெட்டிகள், மரக் கிளைகள் உள்ளிட்ட 4,009 டன் கழிவுகளை அப்புறப்படுத்தியது.
இந்தக் கழிவுகளின் அளவு 2020ஆம் ஆண்டில் 3,490 டன்னாகவும் 2019ஆம் ஆண்டில் 3,640 டன்னாகவும் இருந்தது.
ஒருமுறை பயன்படுத்திவிட்டு கழிக்கப்படும் பொருள்களின் புழக்கத்தைக் குறைப்பதற்கான செயல்திட்டங்கள், கடலோரப் பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள், கடல்வாழ் உயிரினங்களுக்குக் குப்பைகளால் ஏற்படக்கூடிய தாக்கம் போன்ற பிரச்சினைகள் தொடர்பான ஆய்வு உருவாக்க முயற்சிகள் போன்றவற்றின் மூலம் சிங்கப்பூர் கடல் குப்பை பிரச்சினையைச் சமாளித்து வந்துள்ளது.
புதிதாக நேற்று தொடங்கப்பட்ட உத்திக்கு 'தேசிய கடல் குப்பை அகற்று உத்தி செயல்திட்டம்' என்று பெயர்.
அதை நீடித்த, நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு தொடங்கியது.
கடலில் இருந்து குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வரும் பல அமைப்புகளின் இப்போதைய முயற்சிகளை அந்த உத்தி செயல்திட்டம் ஒன்று திரட்டும். கடல் குப்பை பிரச்சினைக்குத் தீர்வு காண சிங்கப்பூர் நடைமுறைப்படுத்தும் செயல்களை எல்லாம் முறைப்படுத்தும் முதல் காரியமாக இந்த உத்தி நடப்புக்கு வருகிறது.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
கடலில் குப்பை சேரும் பிரச்சினையை எல்லா நாடுகளும் எல்லா வட்டாரங்களுமே எதிர்நோக்குகின்றன. இருந்தாலும் நாற் புறமும் கடலால் சூழப்பட்ட சிங்கப்பூர் போன்ற தீவு நாடுகளுக்கு இந்தப் பிரச்சினை, தீர்வு காணவேண்டிய முக்கிய பிரச்சினை என்று அவர் தெரிவித்தார்.
"கடலில் சேரும் பிளாஸ்டிக் கழிவு போன்ற குப்பைகளைக் குறைப்பது உயிரியல் பன்மயத்திற்கு இன்றியமையாதது. அதோடு, நம்முடைய மேம்பாட்டிற்கும் அது தேவையான ஒன்று.
"கடலில் குப்பை சேருவதால் கடற்கரை மட்டுமின்றி நம்முடைய வாழ்விடச் சூழலும் பாதிக்கப்படும்," என்று துணை அமைச்சர் தெரிவித்தார்.
தானா மேரா கடற்கரையில் நேற்று நடந்த குப்பை அகற்று நிகழ்ச்சியின்போது தேசிய உத்தி திட்டம் பற்றி திரு டான் அறிவித்தார். அந்த திட்டத்தை பல அமைப்புகள், பேராளர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த அமைச்சு உருவாக்கி இருக்கிறது.