கத்திக்குத்துக்கு ஆளான புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, செயற்கை சுவாச இயந்திரத்தின் உதவி இல்லாமல் இயற்கையாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
திரு ருஷ்டியால் பேச முடிவதாகவும் அவரது படைப்புகளுக்கான முகவர் ஆன்ட்ரூ வைலி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அவரது உடல்நலம் பற்றி வேறு தகவல்கள் வெளியிடப்படவில்லை.
நியூயார்க் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்ற திரு ருஷ்டி மேடை ஏறியபோது, ஆடவர் ஒருவர் அவரை பல முறை கத்தியால் குத்தினார்.
திரு ருஷ்டி படுகாயம் அடைந்தார்.
அவரைக் குத்தியதாக சந்தேகிக்கப்படும் ஹாடி மட்டர் என்ற நபர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் நேற்று கொலைமுயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
24 வயது ஹாடி மட்டர், மேடைக்கு ஓடி திரு ருஷ்டியை குறைந்தது பத்து முறை முகத்திலும் வயிற்றிலும் கழுத்திலும் குத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் மட்டர் தாம் குற்றம் புரியவில்லை என்று நீதிமன்றத்தில் கூறினார்.
பிணை வழங்கப்படாததால் அவர் தற்போது தடுப்புக்காவலில் உள்ளார்.
திரு ருஷ்டிக்கு ஒரு கையில் உள்ள நரம்புகள் அறுந்துபோய் விட்டன என்று நேற்று கூறப்பட்டது.
அவரது கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவரது ஒரு கண்ணில் கண்பார்வையை இழக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் எழுதிய சர்ச்சைக்குரிய நாவலின் தொடர்பில் திரு ருஷ்டிக்கு பல்லாண்டுகளாக கொலைமிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.