அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து கிட்டத்தட்ட 440,000 வெளிநாட்டு ஊழியர்கள் இருக்கும் 1,600 தங்குவிடுதிகள் ஒரே சட்டத்தின்கீழ் வரவுள்ளன.
நோய்ப் பரவலை வேகமாகக் கட்டுப்படுத்தவும் தங்குவிடுதிகளில் உள்ள வசதிகளை தரம் உயர்த்தவும் அதிகாரிகளுக்கு இது உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், ஃபெடா எனப்படும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிச் சட்டம் ஏழு அல்லது அதற்கும் மேற்பட்ட சிறிய தங்குவிடுதிகளையும் உள்ளடக்கும்.
தற்பேதைய நிலையில் இந்தச் சட்டம் 1,000 அல்லது அதற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கான 53 தங்குவிடுதிகளை மட்டுமே உள்ளடக்குவதாக இருக்கிறது.
இவற்றில் மொத்தம் 256,000 பேர் தங்கக்கூடிய படுக்கை வசதிகள் உள்ளன.
இதன்மூலம், பெரிய, சிறிய என அனைத்து தங்குவிடுகளிலும் வசதிகள் மேம்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
எனினும், இது உடனடியாக சாத்தியமில்லை என்றும் காலப்போக்கில் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெடா சட்டம் பற்றி நேற்று அறிவித்த மனிதவள அமைச்சு, அந்தச் சட்டத்தின்கீழ் தங்குவிடுதிகள் தொடர்பான உரிமம், அவற்றின் அளவைப் பொறுத்து நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படும் என்று நேற்று தெரிவித்தது.
நபர் ஒருவருக்கு குறைந்தபட்ச இடவசதி, ஓர் அறைக்குள் அதிகபட்சமாக எத்தனை பேர் இருக்கலாம், துப்புரவு மற்றும் காற்றோட்ட வசதி, போன்ற அத்தியாவசிய தரநிலைகளை அனைத்து தங்குவிடுதிகளும் கொண்டிருக்க வேண்டும். இதில் பெரிய தங்குவிடுதிகளுக்கு, நிர்வாக அமைப்பு, ஊழியர் நலன், பாதுகாப்பு போன்ற அம்சங்களில் கூடுதல் விதிமுறைகள் விதிக்கப்படும்.
சிறிய தங்குவிடுதிகள், அவை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் புதிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென்றாலும், தற்போதைய நிலையில் அவை தங்கள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டி இருக்காது.
உதாரணத்திற்கு, ஏழு முதல் 99 படுக்கை வசதி கொண்ட தங்குவிடுதிகள் ஊழியர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றை பாதிக்கும் விதமான சம்பவங்களை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.
அத்துடன், தொடர்புகளின் தடம் அறிய ஏதுவாக அவை தங்கள் தங்குவிடுதிகளில் உள்ள ஊழியர்களின் பட்டியலை மனிதவள அமைச்சிடம் வழங்க வேண் டும். வர்த்தக ரீதியில் செயல்படும், 100 முதல் 299 படுக்கை வசதிகள் உள்ள தங்குவிடுதிகள் தங்களது நிர்வாக நடைமுறைகள் குறித்து மனிதவள அமைச்சுக்கு குறிப்பிட்ட காலக்கிரமப்படி அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
இவை போன்ற 2ஆம் பிரிவு தங்குவிடுதிகள் தீயணைப்புப் பயிற்சி, பொது சுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கும் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய தடுப்பு நடவடிக்கைகள் போன்றவை அடங்கிய வரைவுத் திட்டத்தையும் கொண்டிருக்க வேண்டும்.
300 முதல் 999 படுக்கை வசதிகள் கொண்ட மூன்றாம் பிரிவு தங்குவிடுதிகள் அதிகாரிகள் உத்தரவிடும்போது போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளை செயலில் ஈடுபடுத்த வேண்டும்.
1,000 அல்லது அதற்கும் மேலாக படுக்கை வசதிகள் கொண்ட தங்குவிடுதிகள், அவை ஃபெடா சட்டத்தின்கீழ் ஏற்கெனவே நிர்வகிக்கப்படுவதால், அவை தொடர்ந்து வழக்கம்போல் செயல்படலாம் என்று மனிதவள அமைச்சு விளக்கியுள்ளது.
சிறிய தங்குவிடுதிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி தற்காலிக உரிமத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அந்த உரிமம் இரண்டாண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
இது ஊழியர்களின் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்தும் பணியில் ஒரு முக்கியமான படி என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் தெரிவித்தார்.
ஆறு அல்லது அதற்கும் குறைவான ஊழியர்களைக்கொண்ட தங்குவிடுதிகள் 0.2 விழுக்காடு மட்டுமே என்று குறிப்பிட்ட மனிதவள அமைச்சு, அவை வெளிநாட்டு ஊழியர் வேலைச் சட்டத்தின்கீழ் கண்காணிக்கப்படுவதாகத் தெரிவித்தது.