குறைந்த சம்பள குடும்பங்கள் உதவி பெறுவதற்கு இன அடிப்படையிலான சுய உதவிக் குழுக்கள் இன்னமும் முக்கிய வழியாக இருந்து வருவதாக பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
சுய உதவிக் குழுக்கள், தங்கள் பயனாளிகளுக்குப் பொருத்தமான திட்டங்களை மிகவும் ஏற்ற வகையில் உருவாக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
சீனர் மேம்பாட்டு உதவி மன்றத்தின் 30வது ஆண்டு நிறைவை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுமக்கள் வருகை நிகழ்ச்சியில் பிரதமர் லீ கலந்துகொண்டு பேசினார்.
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் எனப்படும் சிண்டா, மெண்டாக்கி, யுரேசியர் சங்கம் ஆகியவை ஏன் இன்னும் சிங்கப்பூரின் பல்லின சமுதாயத்தில் பொருத்தமாக உள்ளன என்று தம்மை மக்கள் அவ்வப்போது கேட்பதாக திரு லீ கூறினார்.
இனம் பாராமல் அரசாங்கம் குறைந்த சம்பளக் குடும்பங்களுக்கு உதவி வழங்குகிறது.
அதே வேளையில் அரசாங்கம், சமூகத்தின் உதவியுடன் நடத்தப்பட்டு வரும் இந்த சுய உதவிக் குழுக்கள், இன, சமய அடிப்படையிலான நெருடல்களை ஏற்படுத்தாமல் பிரச்சினைகளை அணுகி கூடுதல் உதவி வழங்க முடியும் என்று பிரதமர் தெரிவித்தார்.
வசதி படைத்த சிங்கப்பூரர்கள் தங்கள் சொந்த சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு உதவ இந்த சுய உதவிக் குழுக்கள் தளமாகச் செயல்படுவதாகவும் திரு லீ கூறினார்.
சிங்கப்பூர் மேலும் வளர்ந்த பொருளியலாகி, பின்னர் வளர்ச்சி மெதுவடையும்போது சுய உதவிக் குழுக்கள் சமூகத்தில் அடுத்தடுத்த படிகளில் முன்னேறிச் செல்வதற்கு உதவும் என்று பிரதமர் கூறினார்.