பல இன, பல சமய மக்களைக் கொண்ட சமூகத்தை ஒற்றுமையுடன் வைத்திருப்பது சவால்மிக்கது என்றும் நல்ல முஸ்லிம், கிறிஸ்துவர், பௌத்தர், இந்துவாக இருக்கும் அதே சமயம் நல்ல குடிமக்களாகவும் இருக்கும் நடைமுறை சிங்கப்பூரில் உள்ளதால் சமூகப் பிணைப்புக்கு அது வகை செய்வதாகவும் பிரதமர் லீ சியன் லூங் நேற்று தெரிவித்தார்.
சிங்கப்பூரில் உள்ள பல்வேறு சமூகங்களுக்கு இடையிலான உறவுகளில் எளிதில் கசப்புணர்வு ஏற்படக்கூடும் என்றும் அவ்வாறு ஏற்படாதிருக்க அரசாங்கங்கள் அதற்குத் தேவையான இணக்கமான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் லீ தெரிவித்தார்.
முதல்முறையாக நடைபெற்ற 'இன்டர்நேஷனல் கான்ஃபரன்ஸ் ஆன் கம்யூனிட்டிஸ் ஆஃப் சக்சஸ்' மாநாட்டில் திரு லீ நேற்று கலந்துகொண்டு பேசினார்.
மாநாட்டுக்கு சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) ஏற்பாடு செய்திருந்தது.
நாட்டுக்குத் தொண்டாற்றும் குடிமக்களாக முஸ்லிம்கள் ஆன பல சம்பவங்களை உதாரணம் காட்டி அவர்களை ஒன்றிணைக்கும் தளத்தை அமைப்பதே மாநாட்டின் இலக்கு.
பிற இனத்தவர்கள் மீது சிறுபான்மை இனத்தவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை தொடர்வது மிகவும் முக்கியம் என்றும் அவர்
வலியுறுத்தினார். ஒதுக்கப்பட்டு விட்டோம் என்ற உணர்வு சிறு
பான்மையினத்தவருக்கு ஏற்படாதபடி பெரும்பான்மையினத்தவர் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று திரு லீ கூறினார்.
அப்போதுதான் சமய நல்லிணக்கமும் சமூகப் பிணைப்பும் தொடர்ந்து வலுவாக இருக்கும் என்றார் அவர்.
"இதில் உள்ள ஆபத்து குறித்து அனைத்துத் தரப்பினருக்கும் தெரியும். எந்த ஒரு குறிப்பிட்ட இனத்துக்கும் அதற்குச் சாதகமான, அது விரும்பும் அனைத்தும் கிடைத்துவிடாது என்று சிங்கப்பூரில் இருக்கும் எல்லா இனத்தவரும் நன்கு அறிவர்," என்றார் பிரதமர் லீ.
சமூகப் பிணைப்பை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர வேண்டும் என்று பல நாடுகளைச் சேர்ந்த சமயத் தலைவர்கள், கல்விமான்கள், அதிகாரி கள் உட்பட மாநாட்டில் கலந்துகொண்டோரிடம் பிரதமர் லீ தெரிவித்தார்.
இனம், சமய பாகுபாடின்றி அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற வேட்கையுடனும் கொள்கையுடனும் பல நாடுகள் தங்கள் பயணத்தைத் தொடங்குவதாகவும் ஆனால் காலப்போக்கில் எல்லாம் மாறிவிடுகிறது என்றும் திரு லீ கூறினார்.
இனம், சமய உணர்வுகளைத் தூண்டி வாக்காளர்களை ஈர்க்கும் ஆசைக்கு இணங்கி செயல்படும் ஆபத்து இருப்பதாகவும் அதன் விளைவாக சமூகத்தில் பிளவு ஏற்பட்டு, வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு ரத்த ஆறு ஓடும் ஆபத்து உள்ளதாகவும் திரு லீ கூறினார்.
"ஒருமுறை அத்தகைய பாதையில் சென்றுவிட்டால் பிறகு அதிலிருந்து மீண்டு வருவது சிரமம். அது ஒருவழிப் பாதையாக என்றென்றும் அமைந்துவிடும்," என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
சமூகத்தில் உள்ள பல்வேறு சமூகங்கள் எவ்வாறு ஒற்றுமை
யுடன் வாழலாம் என்ற அக்கறை முஸ்லிம்களை சிறுபான்மை இனத்தவர்களாகக் கொண்டிருக்கும் சமூகங்களுக்கு அதிகம் இருப்பதை திரு லீ சுட்டினார்.
உலகெங்கும் 1.9 பில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாகவும் அவர்களில் 400 மில்லியன் பேர் தங்கள் நாடுகளில் சிறுபான்மை இனத்தவர்களாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
அவர்களில் பலருக்கு இஸ்லாம் என்பது சமயம் மட்டுமல்ல, வாழ்க்கை முறையாகவும் உள்ளது என்றார் திரு லீ.
இஸ்லாமியர் எனும் அடையாளத்தை வெளிப்படுத்தும் அதே சமயத்தில் முஸ்லிம் அல்லாத சக நாட்டவருடன் அவர்கள் ஒன்றிணைந்து, வாழ்வது மிகவும் முக்கியம் என்று பிரதமர் லீ தெரிவித்தார்.