ஈசூனில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்கின் ஐந்தாவது மாடி வீட்டில் நேற்றுக் காலை தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஐவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அந்த வீட்டின் படுக்கை அறைகளிலிருந்து மீட்கப்பட்ட அந்த ஐவரும் புகையைச் சுவாசித்தனர். அவர்களில் இருவருக்கு லேசான தீக்காயங்களும் ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
அந்த வீட்டில் பல்வேறு கூண்டுகளில் இருந்த வெள்ளெலிகளும் மீட்கப்பட்டன.
புளோக் 451 ஈசூன் ரிங் ரோடு எனும் முகவரியில் ஏற்பட்ட தீச்சம்பவம் குறித்து காலை 9.50 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
வசிப்பறையிலும் சமையலறையின் ஒரு பகுதியிலும் தீ மூண்டது. அந்த புளோக்கின் மூன்றாவது முதல் ஏழாவது மாடி வரையில் வசிக்கும் ஏறக்குறைய 100 குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.
வசிப்பறையில் இருந்த மின்சைக்கிளின் மின்கலனிலிருந்து தீ மூண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
வீவகவும் நீ சூன் நகர மன்றமும் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பதாக நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் கோ தெரிவித்தார்.
"தீக்கிரையான வீடு துப்புரவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் வேளையில், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தற்காலிக வசிப்பிடத்துக்கு ஏற்பாடு செய்ய வீவகவுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்," என்றார் அவர்.