இருவகை ஆற்றல் கொண்ட மொடர்னாவின் ஸ்பைக்வேக்ஸ் தடுப்பூசி முன்கூட்டியே போடப் படுகிறது.
அந்தத் தடுப்பூசி அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று சில வாரங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மூன்று நாள்களுக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து இருவகை ஆற்றல் கொண்ட தடுப்பூசி போடப்படும் என்று சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது.
ஆயத்த வேலைகள் எதிர்பார்த்ததைவிட முன்கூட்டியே முடிந்துவிட்டதால் தடுப்பூசி விரைவில் போடப்படும் என்று அது கூறியது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் மொடர்னா இருவகை ஆற்றல் கொண்ட தடுப்பூசிக்கு சுகாதார அறிவியல் ஆணையம் ஒப்புதல் வழங்கியது. இது, ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட சார்ஸ்-கொவிட், ஓமிக்ரான் பிஏ1 உருமாறிய கிருமிக்கு எதிரானது.
ஓமிக்ரான் பிஏ.4, ஓமிக்ரான் பிஏ.5, மற்றும் இதர டெல்டா, காமா உருமாறிய கிருமிகளுக்கு எதிராக மொடர்னாவின் இருவகை ஆற்றல் தடுப்பூசி வலு வுடன் செயல்படுவதை ஆரம்பக்கட்ட புள்ளி விவரங்கள் காட்டு வதாக சுகாதார அறிவியல் ஆணையம் குறிப்பிட்டது.
"ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், கடைசி தடுப்பூசி போட்டு குறைந்தது ஐந்து மாதங்கள் ஆகி இருந்தால் உடனே இருவகை ஆற்றல் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.
"இதற்காக தீவு முழுவதும் ஒன்பது இடங்களில் கூட்டுச் சோதனை, தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன," என்று நேற்று செய்தியாளர்களிடம் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
முன்பதிவுக்கு அவசியம் இல்லை என்றார் அவர்.
மருத்துவரீதியில் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருந்தால் ஐம்பது வயதுக்கும் குறைவானவர்களும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.
சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர் ஓங், நேற்று மட்டும் 4,700 தொற்றுச் சம்பவங்கள் பதிவானதாகக் கூறினார். இருவகை ஆற்றலுள்ள தடுப்பூசிகளை போட சிங்கப்பூர் தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.