இந்தியாவின் அமிர்தசரஸ் நகரிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்ற ஸ்கூட் விமானம், 35 பயணிகளை ஏற்றாமல் சென்றது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே விமானம் புறப்பட்டுச் சென்றதால் இந்தச் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து இந்திய போக்குவரத்து ஓழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்கு நர் அலுவலகம் சம்பவத்தை விசாரித்து வருகிறது.
அமிர்தசரஸ் விமான நிலையத்தில் 35 பயணிகளைத் தவிக்கவிட்டு முன்கூட்டியே அந்த விமானம் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றது எப்படி என்று அது கேள்வி எழுப்பியிருக்கிறது.
புதன்கிழமை அன்று அமிர்த சரஸ் விமான நிலையத்திலிருந்து அந்த ஸ்கூட் விமானம் இரவு 7.55 மணிக்குப் புறப்படுவதாக நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் ஐந்து மணி நேரத்துக்கு முன்பே பிற்பகல் 3.00 மணிக்கே விமானம் புறப்பட்டுச் சென்றது. தங்களை ஏற்றாமல் சென்ற 35 பயணிகள் கோபத்தில் ஆர்ப்பரித்துக் கூச்சலிட்டனர். இதனால் விமான நிலையத்தில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
அங்கிருந்த விமான நிலைய அதிகாரிகளிடமும் அவர்கள் புகார் செய்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் தொடர்புகொண்டபோது நேரம் மாற்றம் குறித்து முன்கூட்டியே மின் அஞ்சல் வழியாக பயணி களுக்குத் தெரிவிக்கப்பட்டது என்று ஸ்கூட் தரப்பு கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்ட அந்த விமானத்தில் 280 பயணிகள் பயணம் செய்வதாக இருந்தது. ஆனால் நேர மாற்றத்தால் 253 பயணிகள் மட்டுமே சென்றனர். 30க்கும் மேற்பட்ட பயணிகள் ஏற்றிச் செல்லப்படவில்லை என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அமிர்தசரஸ் விமான நிலைய இயக்குநர் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஸ்கூட்டிடமும் அமிர்தசரஸ் விமான நிலையத்திடமும் இந்த விவகாரம் குறித்து இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குர் அலு வலகம் விளக்கம் கேட்டுள்ளது.
முப்பது பேருக்கு குழுவாகப் பதிவு செய்த சுற்றுப்பயண நிறுவனம் ஒன்று நேர மாற்றம் குறித்து பயணிகளிடம் தெரிவிக்கவில்லை என்று ஏஎன்ஐயிடம் விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கு முன்னதாக இதே போன்ற சம்பவம் பெங்களூர் விமான நிலையத்தில் அண்மையில் நடந்தது. டெல்லியை நோக்கிச் சென்ற கோ ஃபர்ஸ்ட் விமானம் 55 பயணிகளை ஏற்றாமல் சென்றது. இம்மாதம் 9ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்தது.