இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னைக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
அவரது இந்த இரண்டு நாள் பயணம் இம்மாதம் 9ஆம் தேதியன்று நிறைவுபெறும்.
நாளை மறுநாள் அவர் சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைக்கப்பட்ட முனையத்தைத் திறந்துவைக்கிறார்.
சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்துக்கான கட்டுமானப் பணிகள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
கூடுதல் பயணிகள் போக்குவரத்தைக் கையாள இந்த முனையம் கட்டப்பட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 35 மில்லியன் பயணிகளைக் கையாளும் ஆற்றல் இந்த முனையத்துக்கு இருக்கும் என்று நம்பப்படுகிறது.
அத்துடன், புதிய முனையத்தால் மணிக்கு 45 விமானங்களைச் சமாளிக்க முடியும். புதிய முனையத்தைக் கட்ட இந்திய அரசாங்கம் ரூ. 2,500 கோடி முதலீடு செய்துள்ளது.
அதில் அனைத்துலக, உள்ளூர் விமானச் சேவைகள் வழங்கப்படும்.
இது ஒருபுறம் இருக்க, சென்னை-கோயம்புத்தூர் ரயில் பாதையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைப்பார்.
இதை அவர் சென்னை மத்திய ரயில் நிலையத்திலிருந்து தொடங்கிவைக்க இருக்கிறார். செங்கோட்டைக்கும் தாம்பரத்துக்கும் இடையிலான விரைவு ரயில் சேவையையும் திருத்துறைப்பூண்டிக்கும் அகஸ்தியம்பள்ளிக்கும் இடையிலான ரயில் சேவையையும் திரு மோடி தொடங்கிவைக்க இருக்கிறார்.
இந்த ரயில் சேவை கோயம்புத்தூர், திருவாரூர், நாகபட்டினம் ஆகிய இடங்களிலிருந்து புறப்படும் பயணிகளுக்குப் பலனளிக்கும்.
சென்னையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழா கொண்டாட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
என்எச் 744 தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
தமிழ்நாடு-கேரளா சாலை இணைப்பை மேம்படுத்த ரூ. 2,400 கோடி செலவில் சாலை அமைக்கப்படுகிறது. கேரளாவிலிருந்து மதுரை மீனாட்சியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆகிய இடங்களுக்குச் செல்லும் பக்தர்களுக்கும் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவில் உள்ள சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கும் வசதியாக இந்த சாலை அமைக்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி தமிழ்நாட்டில் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக சிறப்புப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர். அதுமட்டுமல்லாது, பாதுகாப்புப் பணிகளில் தமிழக காவல்துறை
தீவிரம் காட்டி வருகிறது.