தமிழ்நாட்டின் விளையாட்டு, இளையர் நலன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூன்று நாள் தனிப்பட்ட சுற்றுப்பயணமாக கடந்த வாரம் சிங்கப்பூர் வந்திருந்தார். அப்போது அவர் லிட்டில் இந்தியாவின் சிறப்பம்சங்களையும் மரபுடைமையையும் அறிந்துவியந்தார்.
தமது பயணத்தின் இறுதியில் கடந்த ஞாயிறன்று லிஷா எனப்படும் லிட்டில் இந்திய வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் செயலவை உறுப்பினர்களைச் சந்தித்து அவர் உரையாடினர்.
லிட்டில் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புகளை ஆர்வத்துடன் அறிந்துகொண்ட திரு உதயநிதி, இங்கு வாழும் தமிழர்களையும் குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து வந்து பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களையும் அதிகம் கேட்டு தெரிந்துகொண்டார்.
ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் முழுவதும் சிங்கப்பூரில் கொண்டாடப்பட்டு வரும் தமிழ்மொழி விழாவை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
தமிழ்மொழியைப் போற்றும் விதமாக முப்பதுக்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் ஒன்று இணைந்து கொண்டாடும் இதுபோன்ற முயற்சிகள், கடல்கடந்து வாழும் தமிழர்களின் மொழி ஆர்வத்தையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது என்று திரு உதயநிதி பகிர்ந்துகொண்டார்.
லிட்டில் இந்தியாவில் உள்ள இந்திய மரபுடைமை நிலையம் பற்றியும் அங்குள்ள அரும்பொருளக கலைப்பொருள்கள் பற்றியும் அவர் கேட்டறிந்தார்.
இம்முறை நேரம் குறைவாக இருப்பதனால் அடுத்த முறை சிங்கப்பூர் வரும்பொழுது அந்த நிலையத்தை நேரில் சென்று பார்வையிட தாம் விரும்புவதாக அவர் கூறினார். மேலும், லிஷாவின் வருடாந்திர நடவடிக்கைகள், செயல்பாடுகள், நிகழ்வுகள், உள்ளூர் வர்த்தகர்களுக்கு அளிக்கும் ஆதரவுகள் குறித்தும் தெரிந்துகொண்டார் திரு உதயநிதி.
‘உலகின் விரும்பத்தக்க அக்கம்பக்கம்’ எனும் தரவரிசையில் கடந்த ஆண்டு லிட்டில் இந்தியா இடம்பெற்றதையும் அறிந்து மகிழ்ந்தார்.
ராஃபிள்ஸ் அவென்யூவில் உள்ள தனியார் தங்குவிடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு துவங்கிய இக்கலந்துரையாடல், ஏறத்தாழ அரை மணிநேரம் நீடித்ததாக லிஷா செயலவைக் குழு தெரிவித்தது.
முன்னதாக, திரு உதயநிதிக்கு பொன்னாடையும் மாலையும் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சிங்கப்பூரின் இந்தியர் கலாசாரத்தை வளர்ப்பதில் தமிழக அரசுடன் இணைந்து பணியாற்ற தமது குழு விருப்பம் தெரிவித்ததாகவும் அதனை திரு உதயநிதி வரவேற்றதாகவும் லிஷாவின் மூத்த ஆலோசகர் ராஜ்குமார் சந்திரா தமிழ் முரசிடம் கூறினார்.