வெலிங்டன்: பழங்குடியினர் பாரம்பரியமாக குழிகளைத் தோண்டிதான் இறைச்சி, காய்கறிகளைச் சமைப்பார்கள்.
அதைப்போலவே ஒரு பன்றியைச் சமைத்து உண்ண ஆஸ்திரேலியாவின் பிரைபீ தீவின் கடற்கரையில் திரு ஜாஷ் டெய்லர் தம்முடைய நண்பர்களுடன் 1.5 மீ. ஆளமான குழியைத் தோண்டியுள்ளார்.
குழியின் அருகில் நாற்காலியில் அமர்ந்திருந்த திரு டெய்லர், அதிலிருந்து எழுந்து நின்றபோது அவரைச் சுற்றியிருந்த மணல் சரியவே, அவர் தவறி குழியில் விழிந்துவிட்டார்.
அவரது பாதங்கள் கூட கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு மணல் அவரை முழுவதுமாக மூடிவிட்டது. குடும்பத்தினர் பதறி உதவிக்கு கூக்குரலிட்டனர்.
அங்கிருந்த அதிகாரிகள், வழிப்போக்கர்கள் உட்பட 15 பேர் ஒன்றுசேர்ந்து குழியில் இருந்து அவரைப் போராடி மீட்பதற்குள் அவரது மூச்சு நின்றுவிட்டது.
அவருக்கு உடனே இதய இயக்க மீட்புச் சிகிச்சை (சிபிஆர்) அளிக்கப்பட்டு, 45 நிமிடங்களுக்குப் பிறகு நாடித் துடிப்பு திரும்பியது.
விமானம் மூலம் அலெக்சாண்டிரா மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
அவரது குடும்பத்துக்காக நிதிதிரட்டு ஏற்பாடு செய்யப்பட்டு, இதுவரை $44,200 நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
சவால் நிறைந்த நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் துடிதுடிப்பானவரான திரு டெய்லர், பலருக்கு மகிழ்ச்சியை வழங்கிய ஒருவர் என்று நிதிதிரட்டை வழிநடத்திய திருவாட்டி ஜியார்ஜியா ஹொஃப்மன் கூறினார்.
சமூக ஊடகத்தில் திரு. டெய்லரை காப்பாற்றியோருக்கு பாராட்டுகளும் அவர் நலமடைய பிரார்த்தனைகளும் பதிவாகி வருகின்றன.