சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ள நிலையில், மாணவர்களைக் ‘காதலில் விழ’வைக்க அங்குள்ள ஒன்பது தொழில்முறைக் கல்லூரிகள் அவர்களுக்கு ஒரு வார விடுமுறை அளித்துள்ளன.
ஏப்ரல் 1 முதல் 7ஆம் தேதிவரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அந்தக் கல்லூரிகளை நடத்தும் ஃபன் மெய் கல்விக் குழுமம் மார்ச் 23ஆம் தேதி அறிவித்திருந்தது.
இயற்கையை நேசித்து, வாழ்க்கையை நேசித்து, காதலை ரசிக்குமாறு மாணவர்களிடம் அக்குழுமம் கேட்டுக்கொண்டது.
“கல்லூரி வளாகத்தைவிட்டு வெளியேச் சென்று, இயற்கையுடன் இணைந்து, வசந்தக் காலத்தின் அழகை ரசியுங்கள்,” என்று ஃபன் மெய் குழுமத்தின்கீழ் இயங்கும் மியன்யாங் ஃபிளையிங் தொழில்முறைக் கல்லூரி குறிப்பிட்டது.
விமானப் போக்குவரத்துத் துறையில் சேர விரும்பும் மாணவர்களுக்கான இந்தக் கல்லூரிகள், 2019 முதலே வசந்தக் காலத்தில் ஒரு வாரகால விடுமுறையை அளித்து வந்துள்ளன.
எனினும், “பூக்கள் பூக்கும் தருணங்களை ரசியுங்கள், காதலில் விழுங்கள்” எனும் இவ்வாண்டின் கருப்பொருள், காதலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
ஆனால், இந்த ஒரு வாரத்தில் மாணவர்களுக்குக் காதலோடு சேர்ந்து வருகிறது வீட்டுப்பாடமும்.
பயணக் குறிப்பு, கைவினைப் பொருள்களைத் தயாரிப்பது, பயணம் தொடர்பான காணொளிகளைப் பதிவுசெய்வது, தங்கள் தனிப்பட்ட வளர்ச்சி குறித்து அறிக்கைகளை எழுதுவது போன்ற பணிகளை மாணவர்கள் முடிக்க வேண்டும்.