பெட்டாலிங் ஜெயா: இடைத்தேர்தலில் தேசிய முன்னணிக் கட்சி மாபெரும் வெற்றி வாகை சூடியிருப்பது டாக்டர் மகாதீர் முகமது தமக்கு எதிராகக் கூறிய பொய்களை மக்கள் நிராகரித்திருப்பதைக் காட்டுவதாக மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் கூறியுள்ளார். எதிர்க்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமையவே, தேசிய முன்னணி வேட்பாளர்கள் நேற்று முன்தினம் சுங்கை புசார், கோலா கங்சாரில் நடந்த இடைத் தேர்தலில் கூடுதல் வாக்குகள் வித் தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
மலேசியப் பிரதமர் நஜிபின் தலைமைத்துவத்துக்கு எதிர்ப்பு வலுத்துவந்த போதிலும் அம்னோ கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. 1எம்டிபி விவகாரத்தின் தொடர்பில் பிரதமர் நஜிப்பை பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் கடந்த ஓராண்டாகவே வலியுறுத்தி வருகின்றன. முன்பு எதிரிகளாக இருந்த அமானா கட்சியினருக்கு டாக்டர் மகாதீர் இந்தத் தேர்தலில் ஆதரவு தெரிவித்தபோதும் இவ்விரு தொகுதிகளிலும் அமானா கட்சி மூன்றாமிடத்தையே பிடித்தது. கோலா கங்சாரில் 6,969 வாக்குகள் வித்தியாசத்திலும் சுங்கை புசாரில் 9,191 வாக்குகள் வித்தியாசத்திலும் தேசிய முன்னணிக் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கோலா கங்சாரில் 1,082 வாக்குகள் வித்தியாசத்திலும் சுங்கை புசாரில் 399 வாக்குகள் வித்தியாசத்திலும் தேசிய முன்னணிக் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.