ஜகார்த்தா: இந்தோனீசியாவில் ஒரு கும்பல் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக போலி தடுப்பூசிகளை விநியோகம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கும்பலைச் சேர்ந்த 16 பேரை இந்தோனீசியப் போலிசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான போலி தடுப்பூசிகளையும் போலிசார் கைப்பற்றினர். 2003ஆம் ஆண்டு முதல் இந்தோனீசியாவில் உள்ள பல்வேறு மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு போலி தடுப்பூசிகளை அக்கும்பல் விநியோகம் செய்து வந்ததாக தெரியவந்துள்ளது என்று போலிசார் கூறினர்.
காச நோய், கல்லீரல் அழற்சி நோய் போன்ற நோய்களுக்கு எதிராக பத்து அல்லது அதற்கும் குறைந்த வயது சிறுவர்களுக்கு இந்தோனீசியாவில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. போலி தடுப்பூசி விநியோகம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தோனீசிய அரசாங்கம் மில்லியன் கணக்கான சிறுவர்களுக்கு மீண்டும் தடுப்பூசி போடவுள்ளது. எந்தெந்தக் குழந்தைக்கு தடூப்பூசி மீண்டும் தேவைப்படுகிறது என்பதை பெற்றோர்கள் அவர்களின் குடும்ப மருத்துவர்களின் ஆலோசனையை நாடுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.