சிங்கப்பூரில் 'ஸிக்கா' தொற்று குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் சிங்கப்பூரிலிருந்து ஜோகூருக்குச் செல்லும் இரு முக்கிய நுழைவுவழிகளிலும் மலேசிய சுகாதார அமைச்சு கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளது. 'ஸிக்கா' தொற்று தொடர்பாக மலேசிய சுகாதாரத் துறை அதிகாரிகள் சிங்கப்பூர் சுகாதார அமைச்சுடன் அணுக்கமான தொடர்பில் இருப்பதாக மலேசிய சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
"ஸிக்கா தொற்று அறிகுறியுடன் சுற்றுப்பயணிகள் யாரேனும் வந்தால் போதிய நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்வதற்காக இரு முக்கிய நுழைவாயில்களிலும் துணை மருத்துவப் படையினரை மலேசியா பணியமர்த்தி உள்ளது," என்று அவர் கூறினார். அத்துடன், 'ஸிக்கா' கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து மலேசியாவிற்கு வந்த சுமார் இரண்டு மில்லியன் சுற்றுப்பயணிகளைத் தமது அமைச்சு பரிசோதித்ததாகவும் அவர்களில் யாருக்கும் அந்த பாதிப்பு இருந்ததாகக் கண்டறியப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.