ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் விமானச் சேவைகள் நேற்று காலை மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பி இயங்கத் தொடங்கின. பெரும்பாலான ஆர்ப்பாட்டக்காரர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேறிய நிலையில், சில ஆர்ப்பாட்டக்காரர்கள் மட்டும் அங்கேயே இருந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டனர்.
விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது போலிசார் தாக்குதல் நடத்தியதால் ஆயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டு இருந்தனர். இதனால் விமானச் சேவைகள் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டன.
இதன் தொடர்பில் பலரது பயணங்கள் தடைப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மன்னிப்புக் கோரினர். அனைத்துலகப் பயணிகள், செய்தியாளர்கள், சம்பவ இடத்தில் இருந்த மருத்துவ அதிகாரிகள் என அனைவரிடமும் சமூக ஊடகம் வழியாகவும் மன்னிப்பு கோரப்பட்டது.
ஆர்ப்பாட்டக் கும்பல் அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் போலிசாரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
பயணிகளை வழிமறிக்காத வண்ணம் விமான நிலைய முனையத்தின் ஒரு பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தரை முழுவதும் துண்டு பிரசுரங்களையும் பதாகைகளையும் பரப்பி வைத்தனர். அவற்றில் மன்னிக்குமாறு குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன.
அத்துடன் கைகளில் பலகைகள் ஏந்தியவாறு பல ஆர்ப்பாட்டக் காரர்கள் தலையைக் குனிந்தபடி விமான நிலையத்தில் மன்னிப்பும் கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் விமான நிலையத்தின் அதிகாரிகள் பாதுகாப்புச் சோதனைகளைப் பலப்படுத்தியுள்ளனர். சட்டவிரோதமாகச் செயல்படுவோருக்கு எதிராக இடைக்கால உத்தரவை அவர்கள் பெற்றுக்கொண்டனர்.
இதற்கிடையே ஹாங்காங் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதன் தொடர்பில் ‘கெத்தே பசிஃபிக்’ விமானச்சேவை நிறுவனம் அதன் இரு விமானிகளைப் பணிநீக்கம் செய்துள்ளது. ஹாங்காங் விமான நிலையத்தில் விமானச் சேவைகள் ரத்தானதில் கிட்டத்தட்ட 55,000 பயணிகள் பாதிக்கப்பட்டதாகவும் நிறுவனம் கூறியது.
ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய கைதிகள் பரிமாற்றச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. 10வது வாரத்தை எட்டியுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையே பயங்கர வன்முறை வெடித்தது.