சவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் தாக்கப்பட்டதை அடுத்து உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் ஏற்றம் கண்டுள்ளன. தாக்குதலில் அனைத்துலக எண்ணெய் இருப்பு கிட்டத்தட்ட ஐந்து விழுக்காடு குறைந்துள்ளது. சவூதி அரசுக்குச் சொந்தமான அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களை 10 ஆளில்லா வானூர்திகள் தாக்கியதை அடுத்து நாளுக்குக் கிட்டத்தட்ட 5.7 மில்லியன் எண்ணெய் பீப்பாய்களை அந்நிறுவனம் இழந்திருக்கிறது.
எண்ணெய்ச் சந்தைகளுக்கு இது ஆகப் பெரிய இழப்பாக உள்ளது. 1990ஆம் ஆண்டில் குவெய்த்தின் மீது சதாம் ஹுசேன் நடத்திய படையெடுப்பின்போதும் 1979ஆம் ஆண்டில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சியின்போதும் ஏற்பட்ட எண்ணெய் இழப்பைக் காட்டிலும் இப்போது பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் எரிபொருள் துறை தெரிவித்துள்ளது.
எண்ணெய் உற்பத்தியை சவூதி அரேபியா சில நாட்களிலேயே தொடங்கலாம் என்றாலும் முழு ஆற்றலில் செயல்படுவதற்குத் சில வாரங்கள் எடுக்கக்கூடும் என்று இது குறித்து விவரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.
பதில் நடவடிக்கை எடுக்கத் தயாராகும் அமெரிக்கா
எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்ததை அடுத்து, இது குறித்து பதில் நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயார் நிலையில் இருப்பதாக அந்நாட்டின் அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
எண்ணெய் விலைகளின் சீர்குலைவைத் தணிக்க, அமெரிக்காவின் அவசரகால எண்ணெய் இருப்புகளின் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளார் திரு டிரம்ப்.
“இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பவர்களின் அடையாளம் எங்களுக்குத் தெரியும் என நம்புவதற்குக் காரணம் உள்ளது. தாக்குதலுக்குக் காரணமானவர்களின் அடையாளம் குறித்து சவூதி அரசாங்கம் கொண்டுள்ள அனுமானத்தை அறிய நாங்கள் காத்திருக்கிறோம். எந்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு நாம் நடக்கவேண்டும் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ள காத்திருக்கிறோம்,” என்று திரு டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்தார்.