நியூயார்க்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நியூயார்க் மாநிலத்தை முழுவதுமாக முடக்கும் முடிவிலிருந்து பின்வாங்கி உள்ளார். அதற்குப் பதிலாக கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாக அறிவித்துள்ளார்
அம்மாநிலத்தை முடக்கி வைப்பதற்கான அவசியம் ஏற்படவில்லை என்று சனிக்கிழமை தமது டுவிட்டரில் குறிப்பிட்டார். அமெரிக்காவில் கொவிட்-19 கிருமித்தொற்று மரணம் 2,200ஐ நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் திரு டிரம்ப் இவ்வாறு கூறி இருக்கிறார்.
மரண எண்ணிக்கை இரண்டு நாட்களில் இருமடங்கானதால் அமெரிக்க மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஒட்டுமொத்த அமெரிக்க மாநிலங்களில் கிருமி தொற்றியோர் எண்ணிக்கை 124,000க்கு மேல் அதிகரித்த வண்ணம் உள்ளதால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்துக்கு அந்நாடு வந்துள்ளது.
ஜனவரி இறுதிவாக்கில் அமெரிக்காவில் கிருமி பரவத் தொடங்கியபோது திரு டிரம்ப் நிலையான முடிவெடுக்காமல் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை வெளியிட்டு வந்தார்.
கிருமி பரவல் அபாயத்தின் அளவை குறைத்து மதிப்பிட்ட அதேவேளையில் பரவலை மெதுவடையச் செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்குமாறு அமெரிக்கர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
நியூயார்க் மாநிலத்தில்தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அதனை முழுமையாக முடக்கி வைக்கப் போவதாகவும் அதுபற்றி சிந்தித்து வருவதாகவும் அதிபர் கூறி இருந்தார்.
ஆனால், அந்த முடிவுக்கு நியூயார்க் மாநில ஆளுநர் ஆண்ட்ரு குவோமோ எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்.
அண்மையில் சிஎன்என் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், “மாநிலத்தின் எல்லாப் பகுதிகளையும் முடக்குவதன் மூலம் நிலைமை கைவிட்டுப்போய்விடும். உற்பத்தி பாதிக்கப்படும் என்பதோடு இச்செயல் அமெரிக்கரிடம் வெறுப்பை ஏற்படுத்தும்,” என்று கூறியிருந்தார்.
மேலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏராளமான அமெரிக்கர்களை அடைத்து வைக்கும் அதிகாரம் அதிபருக்கு உண்டா என்று அவர் கேள்வி எழுப்பி இருந்தார். ஆளுநரின் இந்தக் கருத்து வெளியான சில மணி நேரங்களில் நியூயார்க்கை முடக்கி வைக்கும் தமது முடிவை கைவிடுவதாக அதிபர் டிரம்ப் கூறினார்.
அதற்குப் பதில் கடுமையான பயண அறிவுரையை வெளியிடுமாறு சிடிசி எனப்படும் அமெரிக்க தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தைக் கேட்டுக்கொள்ளப் போவதாகவும் அந்த அறிவுரையை மூன்று மாநில ஆளுநர்கள் நிர்வகிக்க வேண்டி வரும் என்றும் திரு டிரம்ப் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நியூயார்க் மாநில மக்கள் 14 நாட்களுக்கு அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சிடிசி அறிக்கை வெளியிட்டது. பொது சுகாதாரம், போக்குவரத்து மற்றும் நிதிச் சேவைகள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புத் தொழில்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று அது தெரிவித்தது.