கொவிட்-19 நோய்ப் பரவல் மலேசிய பொருளியலை மோசமாக பாதித்துள்ள வேளையில், ஏதாவது வேலை கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு பல்லாயிரக்கணக்கான மலேசியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவற்றில் பல வேலைகளைக் காலங்காலமாக செய்து வந்தவர்கள் வெளிநாட்டு ஊழியர்களே.
கடந்த மார்ச் 18ஆம் தேதி மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்புக்கு வந்த ஏழு வாரங்களில் ஏறத்தாழ 520,000 மலேசியர்கள் வேலை இழந்ததாக அந்நாட்டு அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை கூறியிருந்தது.
நிலைமை மோசமடைவதைத் தவிர்க்க, பொருளியலை மீட்க மலேசிய அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக அந்நாட்டு பொருளியல் விவகார அமைச்சர் முஸ்தபா முகம்மது கூறினார்.
“ஏற்கெனவே மலேசியர்கள் 520,000 வேலைகளை இழந்துவிட்டனர். நாம் ஒன்றும் செய்யாவிட்டால், 1.8 மில்லியன் வேலைகளை நாம் இழக்கக்கூடும்,” என்று டிவி3 எனும் உள்ளூர் ஒளிவழியில் தாம் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் திரு முஸ்தபா சொன்னார்.
மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருந்த காலகட்டத்தில் அந்நாட்டுப் பொருளியலில் நாள் ஒன்றுக்கு 2.4 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது. மொத்த பொருளியல் இழப்பு 63 பில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்படுகிறது.
அதையடுத்து, இம்மாதம் 4ஆம் தேதி முதல் கிட்டத்தட்ட அனைத்து பொருளியல் துறைகளும் திறக்கப்படும் என மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் இம்மாத முதல் தேதியில் அறிவித்திருந்தார்.
பொருளியல் மந்தமாக இருக்கும் நிலையில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க மலேசிய அரசாங்கத்திற்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான், வெளிநாட்டு ஊழியர்கள் செய்து வந்த வேலைகள் உள்ளூர்வாசிகளுக்குக் கிடைக்கும்.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள செலாயாங் காய்கறி மொத்த விற்பனைச் சந்தையில் வேலை செய்ய சுமார் 1,200 உள்ளூர்வாசிகள் விண்ணப்பித்து இருந்ததாக கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் எட்மண்ட் சந்தாரா இம்மாதம் 4ஆம் தேதி கூறியிருந்தார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்புக்கு வருவதற்கு முன்னதாக, அந்தச் சந்தையில் பெரும்பாலும் வெளிநாட்டு ஊழியர்களே வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான அகதிகளும் வெளிநாட்டு ஊழியர்களும் அதிகாரிகளிடம் பிடிபட்டனர். மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியதற்காக அவர்கள் அதிகாரிகளிடம் சிக்கினர். இந்த ஊழியர்களில் பெரும்பாலானோர் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, மலேசியாவில் நேற்று புதிதாக 54 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களையும் சேர்த்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,589ஆக கூடியது.