யோ டி ஜெனிரோ: பிரேசிலில் கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 1,179 பேர் மாண்டனர். இது அந்நாட்டில் ஒரே நாளில் ஏற்பட்டுள்ள ஆக அதிகமான உயிரிழப்பாகும்.
இதன் மூலம் பிரேசிலில் மொத்த பலி எண்ணிக்கை 17,971ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்து
உள்ளது.
அதே போல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தில் இருந்த பிரிட்டனை மிஞ்சிவிட்ட பிரேசிலில் 271,628 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் ரஷ்யாவும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ அந்நாட்டில் கொரோனா தாக்கத்தைத் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், அங்கு கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
இதற்கிடையே பிரேசிலின் இடைக்கால சுகாதார அமைச்சர் எட்வர்டோ பாஸுயெல்லோ புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் பயன்பாட்டை அதிகரிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரேசிலிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுபற்றி கூறிய அவர், “பிரேசிலிலிருந்து இங்கு வருபவர்களால், அமெரிக்கர்கள் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை.
“அதேசமயம் அங்கும் மக்கள் நோயால் அவதிப்படுவதை விரும்பவில்லை. எனவே பிரேசிலுக்குச் சுவாசக் கருவிகளை வழங்கு
கிறேன்,” என்றார்.
அமேசானின் மூன்று எல்லை பகுதிகளான கொலம்பியா, பெரு, மற்றும் பிரேசில் ஆகியவற்றின் பொது எல்லைப்பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்க அங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அனைத்து அமெரிக்க சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
உலகளவில் கொரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 3,24,889 ஆக உள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்குகிறது.