உலகம் முழுவதும் கொவிட்-19 கிருமித்தொற்றுப் பிரச்சினை மோசமடைந்து வருவதால் நாடுகள் மெத்தனமாக இருந்துவிட வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து இருக்கிறது.
வடஅமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் கொரோனா கிருமி தாண்டவமாடி வரும் நிலையில், இதுவரை இல்லாத விதமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ஆக அதிக கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
“ஐரோப்பாவில் கிருமித்தொற்று நிலைமை மேம்பட்டு வந்தாலும் உலகளவில் அது மோசமாகி வருகிறது,” என்றார் அந்த அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ்.
“கடந்த பத்து நாட்களில், ஒன்பது நாட்களில் 100,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஞாயிறன்று மட்டும் 136,000க்கும் மேற்பட்டோரை கொரோனா கிருமி தொற்றிவிட்டது,” என்று திரு டெட்ரோஸ் தெரிவித்தார்.
அதில் கிட்டத்தட்ட 75% சம்பவங்கள் பத்து நாடுகளில், பெரும்பாலும் அமெரிக்க, ஆசிய நாடுகளில் பதிவானதாக அவர் குறிப்பிட்டார்.
நிலைமை மேம்பட்டு வரும் நாடுகளில் மெத்தனமே ஆகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் சொன்னார்.
“கிருமி பரவத் தொடங்கி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், எந்த ஒரு நாடும் அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தளர்த்த இது நேரமல்ல,” என்றார் திரு டெட்ரோஸ்.
இதனிடையே, இனப் பாகுபாட்டை எதிர்த்து அமெரிக்காவிலும் வேறு பல நாடுகளிலும் போராட்டங்கள் இடம் பெற்று வரும் நிலையில், பாதுகாப்பாகப் போராடும்படி அவர் வலியுறுத்தியுள்ளார்.
“சமத்துவத்தையும் இனவாதத்திற்கு எதிரான உலகளாவிய இயக்கத்தையும் உலக சுகாதார நிறுவனம் ஆதரிக்கிறது. எல்லாவிதப் பாகுபாடுகளையும் நாங்கள் நிராகரிக்கிறோம்.
“அதே வேளையில், பாதுகாப்பான நிலையில் இருந்தவாறு போராட்டத்தில் ஈடுபடுபவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
“முடிந்தவரை மற்றவர்களிடம் இருந்து குறைந்தது ஒரு மீட்டர் தூரம் தள்ளி இருங்கள்; கைகளை அடிக்கடி கழுவுங்கள்; வாயை மூடிக்கொண்டு இருமுங்கள்; போராட்டத்தில் ஈடுபட்டால் முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள்,” என்று திரு டெட்ரோஸ் அறிவுறுத்தி இருக்கிறார்.
‘அறிகுறிகள் தென்படாதோரிடம் இருந்து கிருமி பரவுவது அரிது’
இதற்கிடையே, அறிகுறிகள் ஏதும் இன்றி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரிடம் இருந்து மற்றவர்களுக்கு அந்த நோய்த்தொற்று அரிதாகவே பரவும் என உலக சுகாதார நிறுவனத்தின் கொவிட்-19 தொழில்நுட்பத் தலைமை நிபுணர் மரியா வான் கெர்க்கோவ் கூறியிருக்கிறார்.
“விரிவான அளவில் தொடர்புகளின் தடமறியும் நாடுகளிடம் இருந்து பல அறிக்கைகள் கிடைத்துள்ளன. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டும் அதற்கான அறிகுறிகள் தென்படாதோருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அந்த நோய்த்தொற்று பரவியதாக அந்த நாடுகள் கண்டறியவில்லை. அப்படித் தொற்றுவது மிகவும் அரிது,” என்றார் திருவாட்டி மரியா.