வாஷிங்டன்: தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் இந்தியர்களால் அதிகம் நாடப்படும் எச்- 1பி விசாவை தற்காலிகமாக ரத்து செய்ய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கருதுவதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
கொரோனா கிருமிப்பரவலால் அமெரிக்காவில் ஏற்பட்டு வரும் வேலையின்மைப் பிரச்சினையைச் சமாளிக்க அவர் இந்நடவடிக்கை குறித்து யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க அரசாங்கத்தின் அடுத்த நிதியாண்டு வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொடங்கும். அந்த நிதியாண்டு தொடங்கும் நேரத்தில் புதிய விசாக்கள் பல வழங்கப்படுவது வழக்கம்.
தற்போது முன்மொழியப்பட்டுள்ள இந்த தற்காலிக ரத்தால் விசாக்கள் வழங்கப்படுவதில் பாதிப்பு ஏற்படலாம் என்ற தகவலை வால் ஸ்திரீட் ஜர்னல் பத்திரிகை, அடையாளம் வெளியிடப்படாத அரசாங்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியிட்டது.
“இதனால் இந்த ரத்து முடியும் வரை அமெரிக்காவுக்கு வெளியில் இருக்கும் எந்த எச்-1பி விசாதாரர்களும் வேலைக்கு வர இயலாது. ஆயினும், இந்த விசாவை வைத்திருப்பவர்கள் தற்போது அமெரிக்காவிற்குள் இருந்தால் அவர்கள் பாதிப்படையும் வாய்ப்புகள் குறைவு,” என்று வால் ஸ்திரீட் கட்டுரை குறிப்பிடுகிறது. இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் அதிகம் நாடும் விசாவாக எச்-1பி உள்ளது. இந்த விசாக்கள் ரத்து செய்யப்பட்டால் ஆயிரக்கணக்கான இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் பாதிக்கப்படுவர்.
கொரோனா கிருமிப்பரவலுக்கு மத்தியில் எச்-1பி விசாக்களை வைத்திருக்கும் இந்தியர்கள் பலர் ஏற்கெனவே தங்களது வேலைகளை இழந்து இந்தியாவுக்குத் திரும்புகின்றனர்.
இருந்தபோதும் இந்த விசா ரத்து குறித்த எந்த இறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் பல்வேறு திட்டங்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்தது.
“அமெரிக்க ஊழியர்களையும் வேலை தேடும் குடிமக்கள், குறிப்பாக வசதி குறைந்தவர்களையும் பாதுகாக்க வாழ்க்கைத்தொழில் நிபுணர்களால் வகுக்கப்பட்ட பல்வேறு தெரிவுகளை இந்த நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது. இது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை,” என்று வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஹோகன் கிட்லி தெரிவித்தார்.
எச்-1 விசாக்கள் மட்டுமின்றி குறுகிய கால, பருவத்திற்கேற்ப வேலை செய்வோருக்கான எச்-2 விசா, கல்விமான்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோருக்கான குறுகிய கால ஜே-1 விசா, பன்னாட்டு நிறுவன ஊழியர்களை அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிய அனுமதிக்கும் எல்-1 விசா போன்றவற்றுக்கும் இந்த ரத்து பொருந்தலாம் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்த ரத்து குறித்த தமது அக்கறைகளை அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் டானஹியு அதிபர் டிரம்ப்பிடம் கடிதம் ஒன்றின்வழி விளக்கினார்.
“பொருளியல் மீண்டு வரும் நிலையில் தங்களது ஊழியரணித் தேவைகளை நிறைவு செய்ய முடியும் என்ற உறுதி அமெரிக்க வர்த்தகங்களுக்குத் தேவைப்படுகிறது. இதற்காக அவர்கள் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் திறனாளர்களை இந்நிறுவனங்கள் பணியில் அமர்த்த அனுமதிக்கப்
படுவது முக்கியம்,” என்று திரு டானஹியு அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டார். தேவைப்படும் திறனாளர்களைப் பணியில் அமர்த்துவதற்கு அமெரிக்க வர்த்தகங்களுக்கு குறுகிய கால எல்-1 விசாதாரர்கள் தேவைப்படுவதாக திரு டானஹியு கூறியதாக ‘தி ஹில்’ பத்திரிகை தெரிவித்தது. தொழில்நுட்பம், கணக்காய்வு, உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் எச்-1பி விசாதாரர்களின் முக்கியத்துவத்தையும் திரு டானஹியு சுட்டியதாக அந்தச் செய்திக் கட்டுரை குறிப்பிடுகிறது.
இத்தகைய தடைகளால் திறனாளர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு இதனால் பொருளியல் முடக்கப்படலாம் என்று திரு டானஹியு கூறினார்.