கொரோனா கிருமித்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 70 வயது அமெரிக்கர் ஒருவர் கிருமித்தொற்றிலிருந்து மீண்டுவிட்டார்; ஆனால் அவரது கிருமித்தொற்று சிகிச்சைக்கான கட்டணம் கேட்பவரை அதிர்ச்சியில் ஆழ்த்துவதாக உள்ளது.
அவரது சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய கட்டணம் US$1.1 மில்லியன் (1.53 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) என்று சியாட்டல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
வடமேற்கு நகரம் ஒன்றில் உள்ள மருத்துவமனையில் மைக்கேல் ஃபுளார், கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்ற அவர், ஒரு கட்டத்தில் மரணத்தின் வாயிலையும் எட்டிப்பார்க்கும் நிலை ஏற்பட்டது. அவர் தமது குடும்பத்தாருக்கு இறுதி விடைகொடுக்க, தொலைபேசி அழைப்பைக்கூட தாதியர் ஏற்பாடு செய்தனர்.
ஆயினும், அந்தக் காலகட்டத்தை எல்லாம் கடந்து, குணமடைந்த அவரை, தாதியர் உற்சாகத்துடன் வழியனுப்ப, மே மாதம் 5ஆம் தேதி வீடு திரும்பினார்.
அவருடைய வீட்டுக்கு அனுப்பப்பட்ட 181 பக்க கட்டண விவரம் மொத்தம் $1,563,183 செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டது.
29 நாட்களுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டதற்கு $114,192, தீவிர சிகிச்சைப் பிரிவில் நாள் ஒன்றுக்கு $13,558 என பட்டியல் நீண்டது.
வயதானவர்களுக்கான, அமெரிக்க அரசாங்கத்தின் மெடிகேர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் திரு ஃபுளார் சேர்ந்திருப்பதால், அவர் சொந்தமாக கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என்றும் இந்த மொத்த கட்டணத்தையும் காப்புறுதி நிறுவனம் கவனித்துக்கொள்ளும் என்றும் அந்த பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.
“ஒரு மில்லியன் வெள்ளிக்கு மேல் செலவு செய்யப்பட்டு எனது உயிர் காக்கப்பட்டுள்ளது; ஆனால், நான் மட்டுமே அதற்கு மகிழ்ச்சி அடைபவனாக இருப்பேன் என்று கருதுகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார் திரு ஃபுளார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online