டெஹ்ரான்: ஈரானில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பால் ஒவ்வொரு ஏழு நிமிடத்தில் ஒருவர் உயிரிழப்பதாக அரசாங்கத் தொலைக்காட்சி நிறுவனம் கூறுகிறது. அந்நாட்டில் நேற்று முன்தினம் 2,598 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் கிருமித்தொற்றால் 215 பேர் மரணமடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தலைநகர் டெஹ்ரானில் உள்ள பரபரப்பான தெரு ஒன்றில் பொதுமக்கள் சிலர் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் செல்லும் காட்சிகளை அரசாங்கத் தொலைக்காட்சி காட்டியது. ஈரான் வெளியிடும் மரண எண்ணிக்கை, உண்மை நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை என நிபுணர்கள் சிலர் கருதுகின்றனர். ஈரானில் இதுவரை 17,405 பேர் கிருமித்தொற்றால் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால், உண்மையிலேயே மரண எண்ணிக்கை அதைவிட கிட்டத்தட்ட இருமடங்காக இருக்கக்கூடும் என்று ஈரானிய நாடாளுமன்ற ஆய்வு நிலையம் ஏப்ரலில் வெளியிட்ட தகவல் ஒன்று கூறுகிறது.