ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருவதால் அங்கு மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கிருமிப் பரவலைத் தடுக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் மூன்றில் ஒரு பங்கினர் வீட்டிலேயே இருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளாமல் வெளியே சென்றதாக விக்டோரியா மாநில அரசு கூறியது.
அதிகாரிகள் அவர்கள் வீட்டிற்குச் சென்று சோதனையிட்டபோது இந்த விதிமீறல் வெளிச்சத்துக்கு வந்தது. இதன் காரணமாக மேலும் கடுமையான நடவடிக்கைகளுக்கும் தண்டனைகளுக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளதாக விக்டோரிய மாநிலத்தின் முதலமைச்சர் டேனியல் ஆண்ட்ரூஸ் நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், வீட்டிலியே இருக்கும் உத்தரவுக்கு மக்கள் உட்படுவதை உறுதி செய்ய இவ்வாரத்திலிருந்து குடியிருப்பு வட்டாரங்களில் ராணுவ வீரர்கள் சுற்றுக்காவலில் ஈடுபடுவர்.
வீட்டிலேயே இருக்கும் உத்தரவை மீறுவோருக்கு 5,000 ஆஸ்திரேலிய டாலர் ($4,900) அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அவசரநிலை மட்டுமே இதற்கு விதிவிலக்கு.
நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் விக்டோரியா மாநிலத்தில் மேலும் 439 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாகவும் நேற்று கிருமித்தொற்று காரணமாக 11 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் ஆஸ்திரேலிய அரசு கூறியது.