அமெரிக்காவில் சோதனை மேல் சோதனையாக நாள்தோறும் கொவிட்-19 பாதிப்பு கூடி வருகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
இந்த நிலையில், பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டு குளிர்காலத்தைச் சமாளிக்க தயாராகும்படி அமெரிக்கா முழுவதும் உள்ள மாநில ஆளுநர்களும் பொது சுகாதார அதிகாரிகளும் பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
நாள்தோறும் புதிதாக ஆயிரக்கணக்கான மக்களை கொவிட்-19 கிருமி தொற்றுகிறது. இது குறைவதாகத் தெரியவில்லை. வெள்ளிக்கிழமையன்று நாடு முழுவதும் 181,000க்கும் மேற்பட்ட மக்களைக் கிருமி தொற்றிவிட்டது. இந்த எண்ணிக்கை சனிக்கிழமை 121,000 ஆக இருந்தது.
கிருமி தொற்றுவோரின் வார சராசரி எண்ணிக்கை 140,000க்கும் அதிகமாக இருக்கிறது. 49 மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. சுமார் 30 மாநிலங்களில் எந்தவொரு வாரத்திலும் இல்லாத அளவுக்குச் சென்ற வாரம் தொற்று அதிகரித்தது.
அமெரிக்காவில் கடந்த வாரத்தில் 378 பேரில் ஒருவர் என்ற அளவில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று நியூயார்க் நகர ஆளுநர் ஆண்ட்ரு குமோ தெரிவித்தார்.
“330 மில்லியன் மக்களில் 894,819 பேர் அல்லது 378 பேரில் ஒருவர் பாதிக்கப்பட்டு இருக்கிறார். முகக்கவசத்துடன் செல்லுங்கள்,” என்று அவர் மக்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
கொவிட்-19 காரணமாக கடந்த வாரத்தில் நாள் ஒன்றில் 1,000 பேருக்கும் அதிக மக்கள் மரணமடைந்தனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பிவிட்டு இருக்கிறது.
அமெரிக்காவின் தொற்றுநோய் வல்லுநரான டாக்டர் ஆண்டனி ஃபாசி, கொவிட்-19 கிருமியை மிகக் கடுமையான ஒன்றாகக் கருதும்படி அமெரிக்கர்களுக்கு மறுபடியும் வேண்டுகோள் விடுத்தார்.
எளிமையான சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றி வந்தால் தொற்று குறைந்துவிடும். மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.
அமெரிக்காவில் மொத்தம் 11,226,218 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக நேற்று நண்பகல் நிலவரங்கள் தெரிவித்தன.
கொவிட்-19 தொற்று காரணமாக 251,256 பேர் மாண்டுவிட்டனர். அந்தத் தொற்றில் இருந்து 6,891,031 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். கொவிட்-19 தொற்றை பொறுத்தவரை உலகில் அமெரிக்காதான் ஆக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இருக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், தான் பதவிக்கு வந்ததும் முதல் வேலையாக கொவிட்-19 கிருமியை ஒடுக்கப் போவதாகச் சூளுரைத்துள்ளார்.
முகக்கவசம் அணிவதை அவர் கட்டாயமாக்கக்கூடும் என்றும் ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் நிதி ஊக்குவிப்புகளை அவர் அறிவிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் அவர் வரும் ஜனவரி 20ஆம் தேதிதான் பதவி ஏற்பார் என்பதால், இப்போதைய தொற்று நிலவரம் நீடிக்கும் பட்சத்தில், அதற்குள்ளாக மேலும் 8 மில்லியன் பேருக்குத் தொற்று ஏற்பட்டுவிடும் என்றும் மேலும் 70,000 பேர் மரணம் அடைந்துவிடக்கூடும் என்றும் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் கணக்கீடு ஒன்று தெரிவிக்கிறது.