ஹாங்காங் அரசாங்கம் முதல்முறையாகத் தனது புதிய அதிகாரத்தைப் பயன்படுத்தி கொவிட்-19 பரிசோதனையைக் கட்டாயமாக்கி உள்ளது.
முதற்கட்டமாக, 14 நடன வளாகங்களின் வருகையாளர்களுக்கு அது கொரோனா பரிசோதனையைக் கட்டாயமாக்கி இருக்கிறது.
அந்த 14 நடன வளாகங்களையும் கடந்த சனிக்கிழமையில் இருந்து வரும் வியாழக்கிழமை வரை மூட உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
நோய்த் தடுப்பு, கட்டுப்பாட்டு (குறிப்பிட்டோருக்குக் கட்டாயப் பரிசோதனை) விதிமுறையின்கீழ், இம்மாதம் 1ஆம் தேதியில் இருந்து 21ஆம் தேதி வரை அந்த 14 நடன வளாகங்களுக்குச் சென்ற அனைவரும் நாளைக்குள் கட்டாயமாக கொவிட்-19 பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
வான் சாய் பகுதியில் உள்ள ஸ்டார்லைட் நடன மன்றத்துடன் தொடர்புடைய 32 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
“உள்ளூரில் கொரோனா பரவல் நிலைமை மோசமடைந்து வருகிறது. நடன நடவடிக்கைகள், நடன அரங்குகள் சம்பந்தப்பட்ட ஒரு கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்களில் பலருக்கும் அந்நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
“அவர்களில் சிலரிடம் கிருமித்தொற்றுக்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை. இது, சமூகத்தில் கிருமிப் பரவல் இருப்பதைக் காட்டுகிறது,” என்று உணவு, சுகாதாரத் துறைப் பேச்சாளர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.
கொரோனா பரிசோதனை அறிவிக்கை கிடைத்த பிறகு அதைச் செய்யத் தவறுவோருக்கு 2,000 ஹாங்காங் டாலர் (S$345) அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகும் ஒருவர் பரிசோதனைக்கு உட்பட மறுக்கும் பட்சத்தில் 25,000 ஹாங்காங் டாலர் அபராதமும் ஆறு மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது.
பரிசோதனை செய்துகொண்டவர்கள் முடிவு கிடைக்கும் வரை வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, வருமான இழப்பு அபாயத்தை எதிர்நோக்கும் ஹாங்காங் குடிமக்களுக்கு ஒருமுறை மட்டும் 5,000 ஹாங்காங் டாலர் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் சனிக்கிழமை நிலவரப்படி, ஹாங்காங்கில் 5,560 பேரை கொரோனா தொற்றிவிட்டதாகவும் அவர்களில் 108 பேர் இறந்துவிட்டதாகவும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஹாங்காங்கில் கொரோனா பரவல் மோசமடைந்து வருவதால், சிங்கப்பூர்-ஹாங்காங் இடையே நேற்று தொடங்கவிருந்த இரு தரப்புப் பயண ஏற்பாடு இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.