துபாய்: இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான அட்ட வணையை ஐசிசி நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
அதன்படி அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை துபாய், அபுதாபி, சார்ஜா மற்றும் ஓமானில் போட்டி நடைபெறும்.
இதில் 16 நாடுகளை உள்ளடக் கிய மொத்தம் 45 போட்டிகள் நடைபெறும்.
முதல் சுற்றில் (தகுதி சுற்று) எட்டு அணிகள் விளையாடும். இதில் இருந்து நான்கு அணிகள் 2வது சுற்றான 'சூப்பர் 12' சுற்றுக்கு முன்னேறும்.
இந்தியா உள்பட எட்டு நாடுகள் நேரடியாக 2வது சுற்றில் நுழைகின்றன.
முதல் சுற்றில் விளையாடும் எட்டு அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளும் 'பி' பிரிவில் பங்ளாதேஷ், ஓமான், ஸ்காட்லாந்து, பாப்புவா நியூகினியா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன. அக்டோபர் 17ஆம் தேதி ஓமனில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஓமான்- பாப்புவா நியூகினியா மோதுகின்றன.
மற்றொரு போட்டியில் பங்ளாதேஷ்-ஸ்காட்லாந்து அணிகள் விளையாடுகின்றன.
22ஆம் தேதியுடன் முதல் சுற்று ஆட்டம் முடிவடைகிறது. இரண்டு பிரிவுகளில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2வது சுற்றுக்கு தகுதி பெறும்.
'சூப்பர் 12' ஆட்டங்கள் அக்டோபர் 23ஆம் தேதி தொடங்குகிறது. இதில் விளையாடும் 12 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்தியா குருப்-2 பிரிவில் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் அதில் உள்ளன.
தகுதிச் சுற்று 'பி' பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் அணியும், 'ஏ' பிரிவில் 2வது இடத்தை பிடிக்கும் அணியும் குருப்-2 பிரிவில் இடம்பெறும்.
இந்தியா- பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 24ஆம் தேதி மோதுகின்றன. இந்த ஆட்டம் துபாயில் நடக்கிறது.
இந்திய அணி 2வது ஆட்டத்தில் நியூசிலாந்துடன் 31ஆம் தேதியும் 3வது போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் நவம்பர் 3ஆம் தேதியும் மோதுகிறது.
தகுதிச் சுற்று அணிகளை இந்தியா, நவம்பர் 5, 8ஆம் தேதிகளில் எதிர்கொள்கிறது.
குருப் 1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட்இன்டீஸ் ஆகிய அணிகளும் தகுதி சுற்றில் இருந்து இரண்டு அணிகளும் (ஏ-1, பி-2) இடம்பெற்றுள்ளன.
நவம்பர் 8ஆம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது.
இதன் முடிவில் இரண்டு பிரிவில் இருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
10 மற்றும் 11 தேதிகளில் அரை இறுதி நடைபெறும்.
இறுதிப்போட்டி நவம்பர் 14ஆம் தேதி துபாயில் நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.