ஜெனிவா: கொவிட்-19 பெருந்தொற்று இன்னும் அதன் இறுதிக்கட்டத்தைக்கூட நெருங்கவில்லை என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசுஸ் கூறியுள்ளார்.
வேகமாக பரவக்கூடிய ஓமிக்ரான் அபாயமற்றது என்று கூறப்படுவது பற்றி அவர் எச்சரித்தார்.
செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தப் பெருந்தொற்று இன்னும் இறுதிக்கட்டத்தைக்கூட எட்டவில்லை," என்று சொன்னார்.
கடந்த நவம்பரில் தெற்கு ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் கிருமி முதன்முறையாக கண்டறியப்பட்டது.
இதற்கு முன்னர் பரவிய திரிபுகளைவிட ஓமிக்ரான் வேகமாகப் பரவக்கூடியதாக இருந்தாலும், அது கடுமையான நோய்ப் பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை.
எனவேதான், பெருந்தொற்றுச் சூழலில் இருந்து, நிரந்தர நோயாக கொவிட்-19 மாறுகிறதா என்ற விவாதம் எழுந்துள்ளது.
ஆனால், அதிகமானோர் தொற்றுக்கு ஆளாகும்போது, கடுமையாக நோய்வாய்ப்படுவோர், மரணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஓமிக்ரான் பரவலால் அதிகரித்துள்ள கொவிட்-19 பாதிப்பு, சில நாடுகளில் உச்சத்தை எட்டியிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக டாக்டர் டெட்ரோஸ் கூறினார்.
"இது, அண்மைய தொற்று அலையின் மிக மோசமான கட்டம் ஒரு முடிவுக்கு வருவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. என்றாலும், எந்தவொரு நாடும் ஆபத்தைவிட்டு இன்னும் விலகவில்லை," என்றார் அவர்.
சில இடங்களில் கொவிட்-19 கிருமியைக் கட்டுக்கடங்காமல் பரவவிட்டால் புதிய, மேலும் ஆபத்தான திரிபுகள் உருவெடுப்பதற்கான சாத்தியம் அதிகரிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.